ஒழுங்கா சினிமா எடுங்க.. அப்புறம் அறிவுரை சொல்லலாம் - வே.மதிமாறன்

மொதல்ல ஒழுங்கா சினிமா எடுங்க.. அப்புறம் தமிழர்களுக்கு அறிவுரை சொல்லலாம்” என்று எழுத்தாளர் வே. மதிமாறன் அவர்கள் ரஜினியின் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பதை கண்டித்தும், ஐபிஎல் போட்டி போராட்டம் திசை திருப்பக்கூடும் என கருதியும் சென்னை அண்ணா சாலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

போலீசார் தடுப்பு வேலி அமைத்து போராட்டக்காரர்களை மைதானம் நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். போராட்டத்தின் போது காவலர்கள் மீதும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எழுத்தாளரும், விமர்சகருமான வே.மதிமாறன் தனது முகநூலில், ”போலிசை தலைவர் எப்படி வெட்டுவாரு தெரியுமா? வன்முறைக்குப் பதில் வன்முறை. ரவுடித் தனத்திற்குப் பதில் ரவுடித் தனம். கடத்தல்காரன், கொள்ளைக்காரன், டான்.

அடிதடிதான் தீர்வு என்று தனது முந்தைய படம் வரைக்கும் மட்டுமல்ல, இனி வர இருக்கும் படம் வரையிலும், கும்மாங்குத்து, வெட்டுக்குத்து. வெடிகுண்டுகளையே உள்ளடக்கமா வைச்சி கோடிஸ்வரனாக இருக்கிற சூப்பர் ஸ்டார் சொல்றார்,

‘வன்முறை கலாச்சாரத்தைக் கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே ஆபத்து’ என்று. வன்முறை கலாச்சாரத்தைக் கிள்ளுவதுகூட வன்முறைதான்.

நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தபோதுகூடப் பொம்மையா ‘கோச்சடையான்’ என்ற பெயரில் வன்முறை செய்தவர்தான் இவர். இதுபோன்ற வன்முறைகள் நடப்பதற்கே இவர்தான் காரணம்.

‘தளபதி படத்துல போலிசை நடுரோட்ல தலைவர் எப்படி வெரட்டி வெரட்டி வெட்டுவாரு தெரியுமா?’ என்று அதற்காகவே அவருக்கு ரசிகர்கள் ஆனவர் எத்தனை பேர் தெரியுமா?

மொதல்ல ஒழுங்கா சினிமா எடுங்க.. அப்புறம் தமிழர்களுக்கு அறிவுரை சொல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>