புதுச்சேரி முதல்வரை கைது செய்ய வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ள முதல்வர் நாராயணசாமியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் பதவியில் இருந்து கொண்டு சட்டவிரோத செயல்பாடுகளில் நாராயணசாமி ஈடுபட்டு வருகிறார்.

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடும் பொது மக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுமா அதே ரீதியிலான நடவடிக்கையை முதல்வர் நாராயணசாமி மீதும் எடுக்க வேண்டும். சட்டம் ஒழுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட உள்ள முதல்வர் நாராயணசாமியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறை கைது செய்ய வேண்டும்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உயிருக்கு ஆபத்தை நேரிடும் சூழ்நிலையை முதல்வர் நாராயணசாமி உருவாக்கி வருகிறார். இனியும் இந்த அரசை நீடிக்க விடக்கூடாது. மத்திய அரசு புதுச்சேரி அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அல்லது தேர்தல் நடத்தப்படும் வரை இந்த அரசை முடக்க வேண்டும். முதல்வர் பதவி ஏற்கும் போது எடுத்து கொண்ட உறுதிமொழிக்கு நேர்மாறாக செயல்படும் நாராயணசாமியை மத்திய அரசு முதல்வர் பதவியில் நீடிக்க விடக்கூடாது.என்றார்.

More News >>