தியேட்டர், ஒடிடி, டிவியில் 5 படங்கள் ரிலீஸ்.. மூன்று தளங்களில் பொங்கல் போட்டி..

அந்த காலத்தில் ஊரில் சினிமா தியேட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு தனி மரியாதை உண்டு. புதிய படங்கள் ரிலீஸானால் முதல் நாளே டிக்கெட் வாங்கி படம் பார்க்காவர்கள் தயவு தேவைப்பட்டது. தியேட்டர் ஓனர், தியேட்டர் மேனேஜர்களுக்கும் தனி மரியாதை கிடைக்கும். புதிய படங்கள் ரிலீஸ் ஆகிறதென்றால் தியேட்டரே அமர்க்களப்படும் பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள். மெல்ல மெல்ல இந்த ஆர்ப்பாட்டங்கள் குறைந்து வருகின்றன. தியேட்டரில் படம் பார்க்க முடியாவிட்டால் ஒடிடி தளத்தில் அல்லது டிவியில் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது. பண்டிகை தினங்களில் திரையரங்குகளில்தான் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்ற ஃபார்முளாவும் தற்போது தகர்ந்துவிட்டது.

தற்போது பட ரிலீஸ் என்பது மூன்று தளங்களில் ஆகும் நிலை உருவாகிவிட்டது. தியேட்டரில் ஒரு பக்கம் வெளியானால், ஒடிடி தளத்தில் மறுபுறம் வேறு படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் டிவியிலும் படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்த பொங்கலுக்கு திரையரங்கில் இரண்டு படங்கள், ஓடிடியில் 2 படமும் தொலைக்காட்சியில் ஒரு படமும் நேரடியாக வெளியாகின்றன. பொங்கலையொட்டி ஜனவரி 13ம் தேதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைக்கு வருகிறது. பான் இந்தியா படமாக பல மொழிகளில் இப்படம் ஒரே நாளில் வெளியாகிறது. ஜனவரி 14ம் தேதி சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படமும் தியேட்டர்களில் வெளியாகிறது.

கொரோனா பரவலால் 50 சதவீத டிக்கெட் அனுமதி மட்டுமே இருந்த நிலையில் பொங்கல் முதல் 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 9 மாதத்துக்கு பிறகு தியேட்டர்களில் ஆரவாரம் கேட்கலாம். பொங்கலுக்கு ஒடிடி தளத்தில் ஹாட் ஸ்டாரில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடித்துள்ள பூமி படம் வெளியாகிறது. அதற்கு முன்னாதாகவே நடிகர் மாதவன், ஷ்ரத்த ஸ்ரீநாத் நடித்துள்ள மாறா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஜனவரி 8 அன்று நேரடியாக ரிலீஸ் ஆகிறது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்கிற படத்தை இயக்கி உள்ளார் முத்தையா. இப்படம் ஜனவரி 14 அன்று சன் டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது.

More News >>