வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு தனி மேலாண்மை இயக்குனர்களை நியமிக்க அரசு முடிவு

தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இன்னொரு நடவடிக்கையாகக் கூட்டுறவுச் சங்கத் தலைவர்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தனியாக மேலாண் இயக்குனர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக ஈரோடு மாவட்டம் தீண்டலில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுக்கு மேலாண் இயக்குனரை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மற்ற தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் இந்த நடைமுறையைப் பின்பற்றி விரைவில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது கூட்டுறவு அமைப்பையும், உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்களையும் அவமானப்படுத்தும் செயல் என்று விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் பணத்தில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசு தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாகவே இந்த அதிகாரிகள் நியமனத்தை நாங்கள் பார்க்கிறோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். அரசின் இந்த நடவடிக்கைகளால் விவசாயிகள் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

More News >>