சத்தமில்லாமல் ராஜஸ்தான் பறந்த அஜீத் படக் குழு.. வலிமை பட அப்டேட் ..

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களுக்குப் பிறகு அஜீத்குமார் வலிமை படத்தில் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். வலிமை படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்துக் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு படக் குழுவின் திட்டத்தைச் சிதறடித்து விட்டது. சுமார் 8 மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் தான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளில் படமாக்கத் திட்டமிட்டனர். கொரோனா ஊரடங்கால் அது நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக டெல்லியில் முக்கிய இடங்கள் காட்சிகளைப் படமாகத் திட்டமிட்டனர். அதுவும் நடக்கவில்லை. படக் குழு கேட்ட இடங்களில் படப் பிடிப்பு நடத்த அதிகாரிகள் அனுமதி தரவில்லை. இதையடுத்து ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தினர். இதில் அஜீத் மோட்டார் சைக்கிளில் பாய்ந்து சென்று எதிரிகளுடன் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

காட்சியின் போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் அஜீத்துக்குக் காலில் காயம் ஏற்பட்டது. அதற்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஒரு மாதம் நடந்த இந்த படப்பிடிப்பு அங்கு முடிவடைந்தது. பிறகு அஜீத் சென்னை திரும்பினார். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரியில் திட்டமிடப்பட்டது. அதன்படி படக்குழு தற்போது சத்தமில்லாமல் ராஜஸ்தானில் சென்று படப்பிடிப்பு நடத்துகிறது. அஜீத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நடிக்கின்றனர்.வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜீத் ரசிகர்கள் படக் குழுவைத் தொல்லை செய்த வண்ணம் உள்ளனர். புத்தாண்டில் அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் படம் பற்றிய அப்டேட், ஃபர்ஸ்ட் லுக் எதுவும் வெளியாகாததால் ஏமாற்றம் அடைந்தனர். மீண்டும் அப்டேட் கேட்டு மெசேஜ் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

More News >>