குழந்தைகள் படத்துக்கு ரஜினி பட இசை அமைப்பாளர் இசை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்துக்கு இசை அமைத்ததுடன் பல்வேறு படங்களுக்கு இசை அமைத்து சூப்பர் ஹீட் பாடல்கள் அளித்தவர் தேவா. அவர் குழந்தைகள் படம் ஒன்றுக்கு இசை அமைக்கிறார்.சரண்யா 3டி ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் “ சில்லு வண்டுகள் “சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதா பாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர். மற்றும் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு, டிரம்பட் பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் மற்றும் மா.குமார் பொன்னுசாமி இருவரும் நடித்துள்ளனர்.ஆர்.எஸ்.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

தேனிசை தென்றல் தேவா இசை அமைக்கிறார். காளிதாஸ் எடிட்டிங் செய்கிறார்.ஜெயகுமார் கலை இயக்கம் அமைக்கிறார். அஜெய் காளிமுத்து நடனம் அமைக்கிறார். கஜினி குபேரன் ஸ்டண்ட் பயிற்சி அளிக்கிறார். மா.குமார் பொன்னுசாமி இணை தயாரிப்பு செய்கிறார். தி.கா.நாராயணன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ் கே.வெங்கிடி.

இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: இது முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்களை கொண்டு குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் என்பதை விடப் பாடம் என்று தான் சொல்லவேண்டும். வாழ்கையில் அடி மட்டத்திலிருந்து, மேல் மட்டத்திற்கு வளர வேண்டும் என்றால் அதற்குத் தவறான வழிகளைப் பின்பற்றக் கூடாது என்பதை இதில் ஆழமாக சொல்கிறோம். அப்படி தனது தம்பிக்காக கெட்ட வழிகளை தேர்ந்தெடுக்கும் ஒரு அண்ணனின் கதை இது.இந்த படம் குழந்தைகளுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் மனநிலையில் சாதி,மதம், ஏழை, பணக்காரன் என்ற பிரிவினைகள் இருக்கக் கூடாது. அவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், உதவி செய்யும் எண்ணமும் உள்ளவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை இன்றைய குழுந் தைகளுக்கு, குழந்தைகளை வைத்தே இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.

நடித்த அனைவரும் குழந்தை நட்சத்திரங்கள் என்பதால் அவர்களை வைத்து காட்சிகளை படமாக்க மிகவும் சிரமப்பட்டோம். இந்த படத்தின் கதையைத் தேனிசை தென்றல் தேவாவிடம் சொன்னபோது குழந்தைகளுக்கு மிகவும் தேவையான படம் அதனால் நான் இசை அமைக்கிறேன் என்றார் அதுவே எங்கள் படத்திற்குக் கிடைத்த முதல் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். ஒரு கானா பாடல் உட்பட நான்கு பாடல்களை பிரமாதமாகத் தந்திருக்கிறார். தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் குழந்தைகளுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இவ்வாறு இயக்குனர் சுரேஷ் கே.வெங்கிடி. கூறினார்.

More News >>