மனநலம் குன்றியவரிடம் பணம் பறித்துக்கொண்டு நடு வழியில் இறக்கிய பேருந்து ஊழியர்கள்

மனநலம் குன்றிய வாலிபரையும், அவரின் தந்தையையும் நடு வழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஊழியர்களை நேரில் ஆஜராகும்படி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தை அடுத்த சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர், மனநலம் குன்றிய தன் மகன் முத்துக்குமாரை மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, விருதுநகர் மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தத்தில் இருந்து, விருதுநகர் கோட்ட அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.

மாற்றுத்திறனாளியான முத்துக்குமாருக்கும், அவருக்கு துணையாக செல்பவருக்கும் இலவச பயணம் செய்வதற்கான சான்றிதழைக் காட்டியுள்ளார் மாரிச்சாமி. அதை ஏற்க மறுத்த நடத்துநர், ஓட்டுநருடன் சேர்ந்து, சான்றிதழ் மற்றும் சிகிச்சைக்கு வைத்திருந்த 6 ஆயிரத்து 570ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன், அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் விருதுநகர் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஆகியோரை ஏப்ரல் 25ம் தேதி நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>