பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்..: வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம்!

பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிட கோரி வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு கடிதம் வலியுறுத்தியுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பிரைவஸி பாலிசியை அண்மையில் மாற்றுவதாக அறிவித்திருந்தது. அதன்படி வாட்ஸ் அப் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அதன் சக நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு ஒப்புதல் அளிக்காத வாடிக்கையாளர்கள் வரும் பிப்ரவரி 8-ம் தேதியோடு வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தது. இதனை நினைவுட்டும் வகையில், கடந்த ஞாயிறு வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட்டஸ் மூலம் வாட்ஸ் அப் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், பிரைவஸி கொள்கையில் மேற்கொண்டுள்ள மாற்றங்களை கைவிடுமாறு வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வில் காத்கார்ட்டுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், வாட்ஸ் அப்பின் புதிய கொள்கைகள் கவலையளிக்கும் விதமாக இருப்பதாக தகவல் தொழில்நுடப் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரைவசி மற்றும் தரவுகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்குமாறும் வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே உள்ள வாட்ஸ் அப் பிரைவசி பாலிசியின் வேறுபாட்டை விரியுங்கள், வாட்ஸ் அப் அதன் சக நிறுவனங்களுடன் தரவுகளை பகிர்கின்றனவா? என 14 கேள்விகள் மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திடம் கேட்டுள்ளது. இதற்கிடையே, உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க்கும் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தலாம் என தெரிவித்திருந்தார்.

More News >>