மோடிக்கு எதிரான கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காதது ஏன்? - டிடிவி தினகரன் விளக்கம்

நான் பாரத பிரதமராக இருப்பவரை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றியது. அதோடு பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் அறிவித்தது.

ஆனால் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தமிழக அரசிடம் இருந்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு ஒரு கடிதம் கூட வரவில்லை என்று கூறுகிறார். அப்படியென்றால் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது உண்மையா, தமிழக அரசு கூறுவது உண்மையா? உடனடியாக எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

நான் பாரத பிரதமராக இருப்பவரை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் மோடி தமிழக மக்களை மதிக்காமல் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றதை பார்த்த பின்பு கருப்பு கொடி போராட்டங்கள் சரியானதுதான் என தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>