வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் புகார்.. கேரள சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக அம்மாநில சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக இன்று அம்மாநில சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமார் ஆகியோர் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்குத் தங்கம் கடத்தியதோடு மட்டுமில்லாமல், கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர்களை கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து இது தொடர்பாகவும் இவர்கள் இருவர் மீது சுங்க இலாகா வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் இருவரும் கேரளாவில் உள்ள சில முக்கிய அரசியல் பிரமுகர்களுக்காகவும் டாலர்களை வெளிநாட்டுக்குக் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒரு முக்கிய பிரமுகர் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தச் சுங்க இலாகா முடிவு செய்தது. ஆனால் சபாநாயகர் பொறுப்பில் இருப்பவரிடம் உடனடியாக விசாரணை முடியாது என்பதால் அது தொடர்பாகச் சட்ட ஆலோசனை பெறச் சுங்க இலாகா தீர்மானித்தது.

இதில், சபாநாயகரிடம் விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தச் சுங்க இலாகா நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கேரள சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் அதற்குப் பின்னர் அவரிடம் விசாரணை நடத்தத் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த புகார் தொடர்பான உண்மைத் தன்மை குறித்து விசாரிப்பதற்காகச் சபாநாயகரின் உதவியாளரிடம் விசாரணை நடத்தச் சுங்க இலாகா முடிவு செய்தது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் சபாநாயகரின் உதவியாளரிடம் சுங்க இலாகா விசாரணை நடத்தியது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மீது டாலர் கடத்தல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தீர்மானித்தது.

இது தொடர்பாகக் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் உமர் நோட்டீஸ் கொடுத்தார். இதையடுத்து இன்று விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று காலை கேள்வி நேரம் முடிவடைந்ததும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதம் தொடங்கியது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் என்பதால் ஸ்ரீராமகிருஷ்ணன் சபாநாயகர் இருக்கையில் அமரக் கூடாது என்பது சட்டமாகும். இதையடுத்து ஸ்ரீராமகிருஷ்ணன் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து எம்எல்ஏக்கள் அமரும் நாற்காலியில் இருந்தார். இதனால் அவருக்குப் பதிலாகத் துணைச் சபாநாயகர் சசி சபையை நடத்தினார். தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சட்டசபையில் பேசி வருகின்றனர்.

More News >>