வாட்டாள் நாகராஜ் தாக்குதல்: ஸ்டண்ட் மாஸ்டர்-இயக்குனர் மோதல்.. முன்னா பட விழாவில் பரபரப்பு..

சங்கை குமரேசன் இயக்கி நடிக்கும் படம் முன்னா. நியா ஹீரோயினாக நடிக்கிறார். டி.ஏ.வசந்த் இசை அமைக்கிறார். ரவி ஒளிப்பதிவு செய்கிறார். ராமு முத்துச் செல்வன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில் டைரக்டர்கள் ஆர்.வி.உதய குமார், வி.சேகர், பெப்சி சிவா, கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் விக்னேஷ், விஜயமுரளி கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ஸ்டண்ட் இயக்குனரும் கில்டு சங்க தலைவருமான ஜாகுவார் தங்கம் பேசியதாவது: இந்த விழாவுக்குத் தாமதமாக வந்ததற்குக் காரணம் கொடைக்கானலில் தயாரிப்பாளர் மற்றும் படக் குழுவை ரவுடி குரூப் ஒரு அறையில் பூட்டி வைத்து மிரட்டுவதாகத் தகவல் வந்தது.

அதுகுறித்து கொடைக்கானலில் போலீஸுக்கு போன் மூலம் தகவல் சொல்ல முயன்றேன் யாரும் போன் எடுக்கவில்லை. பிறகு அவசர உதவி போலீஸுக்கு போன் செய்தேன். அது இந்தியில் பேசியது எனக்கு இந்தி தெரியாது. பிறகு கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லைன் கிடைத்தது. அவரிடம் புகார் அளித்த ரவுடிகளிடமிருந்த அந்த தயாரிப்பாளரையும் மற்றவர்களையும் மீட்டோம்.அவசர போலீஸுக்கு போன் செய்தால் இந்தியில் பேசுகிறது. ஆந்திராவில், கேரளாவில், கர்நாடகாவில் இந்தியில் பேசினால் சும்மா இருப்பார்களா? ஒரு வழி செய்திருப்பார்கள்.

தமிழக மீனவர்களைக் கப்பல் கொண்டு இடித்து இலங்கை படையினர் சாகடித்திருக்கிறார்கள். நாங்கள் வந்தால் சரியாகி விடும் என்று ஆட்சிக்கு வருபவர்கள் அதைத் தடுப்பதில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் இது தான் நடந்தது. பா ஜா ஆட்சியிலும் இதுதான் நடக்கிறது, தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் இல்லாவிட்டால் கன்னட வாட்டாள் நாகராஜ் தமிழக எல்லைக்குள் வந்து தமிழனை அடிக்கும் கொடுமை நடக்கத்தான் செய்யும். தமிழக எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்திய கன்னட வாட்டாள் நாகராஜ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்த அரசும் எடுக்கவில்லை. இவ்வாறு ஜாகுவார் தங்கம் பேசினார். அதற்கு பாஜாவை சேர்ந்த பெப்சி சிவா பதில் அளித்தார். அவர் கூறும்போது,நாங்கள் கட்சி பார்க்கவில்லை. இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போது அன்றைக்கு பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 7 இயக்குனர்களில் நானும் ஒருவன்.

வாட்டாள் நாகராஜை எதிர்த்து போராட்டம் நடத்த நான் தயார், நீங்கள் நேரம் குறித்துச் சொல்லுங்கள் நான் வருகிறேன் என்றார்.இதையடுத்து ஜாகுவார் தங்கம், பெப்ஸி சிவா இருவரும் அருகருகே நின்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக முன்னா படத்தின் டீஸர் மற்றும் ஆடியோ வெளியிடப்பட்டது. இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், வி.சேகர் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார்கள்.

More News >>