ஆதாரம் இல்லை..தான். ஆனால் அரெஸ்ட்.. அரெஸ்ட்.. தான் முறுக்கு காட்டும் மும்பை போலீஸ்

மும்பையில் பிரபலமான முனாவர்பாய் என்ற டிவி நடிகரை திடீரென கைது செய்து முறுக்கு காட்டியிருக்கிறது மும்பை போலீஸ் எந்த ஆதாரமும் இன்றி இவர் கைது செய்யப்பட்டதாகப் பலரும் கொந்தளிக்க மும்பை போலீஸ் கையை பிசைந்து கொண்டு இருக்கிறது. அப்படி என்னதான் செய்துவிட்டார் அவர்? முனாவர் ஃபரூக்கி என்பதுதான் முனாவர்பாயின் முழு பெயர். மும்பையைச் சேர்ந்த இவர் ஸ்டேண்ட்அப் காமெடியன் . தனது அரசியல் கலந்த காமெடி களால் ரசிகர்களைக் கவர்ந்த இவருக்கு ரசிகர்கள் வைத்த பெயர்தான் முனாவர் பாய்.இவர் தன்னுடைய காமெடி நிகழ்ச்சிகளில் எல்லையை மீறி தனிநபர், மதம் மற்றும் மதம் சார்ந்த பலரது உணர்வுகளைப் புண்படுத்திவருகிறார் என ஒரு குற்றச்சாட்டு இவர் மீது இருந்து வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதி பாஜக எம்எல்ஏ வான மாலினி கௌரின் என்பவரது மகன் ஏகலவ்யா சிங் என்பவர் முனாவர் பாய் மீது போலீசில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் முனாவர் திட்டமிட்டேன் இந்து கடவுள்களை இழிவு படுத்தியும் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியும் பேசிவருகிறார் . சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவையும் அவமதித்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார். புகாரை வாங்கிக்கொண்ட இந்தூர் போலீசார் முனாவர் ஃபரூக்கி உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்திருக்கிறது.அவர்கள் மீது மத உணர்வுகளைப் புண்படுத்துதல்- பிரிவு 295 ஏ மற்றும் சட்டவிரோதமாக அல்லது கவனக்குறைவாகச் செயல்படுதல் - பிரிவு 269 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு, கருத்துச் சுதந்திரத்துக்கு விதிக்கப்படும் தடை என்று அப்போதே சர்ச்சை எழுந்தது.

இதைத்தொடர்ந்து முனாவர் ஜாமீன் கோரி நீதிமன்றங்களை அணுக இரண்டு கீழமை நீதிமன்றங்கள் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது.மாவட்ட நீதிமன்றமும் ஜனவரி 5ல் ஃபரூக்கி ஜாமீன் கோரியதை நிராகரித்தது. முனாவரும் அவரது நண்பரான நலினும் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், இந்து தெய்வங்களுக்கு எதிராகக் கருத்துகளை, மக்கள் முன் தெரிவித்ததாகவும் குற்றம் சட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறது.மேலும் இவர்களது நடவடிக்கை சமூகத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்த வழி வகுக்கும் இவர்களுக்கு ஜாமீன் வழங்குவது சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்பாக அமையும். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்க முகாந்திரமும் இல்லை என்று சொல்லி ஜாமீன் மனுவை நிராகரித்தது.வேறுவழியின்றி , முனாவர் உயர் நீதிமன்றத்தை அணுக அங்குக் கடந்த 15ம் தேதி இவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்தூர் போலீசார் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை. மேலும் ஆவணங்களைத் தயாரிக்க அவகாசம் வேண்டும் என்று கூற நீதிமன்றமும் அதை ஏற்று விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தது.இது குறித்து இந்தூர் துகோகஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் கமலேஷ் சர்மா , முனாவருக்கு எதிராக எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவர் ஒரு நிகழ்ச்சி அமைப்பாளர் என்ற அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்து தெய்வங்கள், மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவமதித்தார்கள் என்பது தொடர்பாக ஆதாரமும் இதுவரை கையில் இல்லை என்று சொல்லியிருக்கிறார்

எதற்காக இவரைக் கைது செய்திருக்கிறீர்கள் என்று நீதிமன்றம் கூட கேட்கவில்லை. கைது செய்து இரண்டு நாள்கள் சிறையில் அடைத்த போலீசாரே அவர் மீதான புகாருக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியிருக்க அவர் ஏன்? எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார் ? என முனாவரின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இந்தூர் காவல்துறை உயரதிகாரியான விஜய் காத்ரி என்பவர் முனாவர் ஃபரூக்கியும் அவரது நண்பர்களும், சிறையில் அடைக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இந்து மதத்தைப் பற்றி இழிவாக எதுவும் கூறவில்லை. நிகழ்ச்சி ஒத்திகையை வைத்துத்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வாய்மொழி ஆதாரம் வேறு எந்த ஆதாரமும் இல்லை" என்று சொல்லியிருக்கிறார். ஆதாரம் இல்லை என போலீஸாரே ஒப்புக்கொண்டிருக்கும்போது முனாவர் ஏன் கைதுசெய்யப்பட்டார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரம் சமத்துவம் என்பது அனைவரையும் சமமாக அணுகுவது, அனைவருக்கும் சமமான நீதி என்பதே இதேபோன்ற ஒரு வழக்கில் உச்ச நீதிமன்ற முன்மாதிரி தீர்ப்பு இருந்த போதிலும், அது ஏன் பயன்படுத்தப்படவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.இவ்வளவு நடந்தும் மும்பை போலீசாரின் முறுக்கு கொஞ்சமும் குறையவில்லை. ஏன் இப்படி என்ற கேள்விக்கு விடையும் இல்லை.

More News >>