மாஸ்டர் எஃபெக்ட்: ஒடிடி தளத்திலிருந்து பின் வாங்கும் படங்கள்..

கொரோனா காலகட்டம் உலக மக்களின் வாழ்கையை திருப்பி போட்டுவிட்டது. பல லட்சம் பேர் வேலை இழந்தனர். பொருளாதாரா நஷ்டத்தால் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. அந்த வகையில் திரையுலகமும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் முதல் தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் இன்னும் மீண்டு வர முடியாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர். 8 மாதங்கள் சினிமா தியேட்டர்கள் மூடிக்கிடந்தன. கோடிகளில் செலவு செய்து தயாரிக்கப்பட்ட புதிய படங்கள் முடங்கியது. கடன் வாங்கி படம் எடுத்தவர்கள் வட்டி கட்ட முடியாமல் தவித்தனர். இந்தநிலையில்தான் ஒடிடி தளங்கள் சினிமாவை ஆக்ரமித்தன. சூர்யா நடித்த சூரரைப் போற்று, ஜெயம் ரவி நடித்த பூமி, ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண் குயின், யோகி பாபு நடித்த காக்டெய்ல், வரலட்சுமி நடித்த டேனி என பல படங்கள் ஒடிடியில் வெளியானது. இதில் சூரரைப் போற்று படம் வசூல் சாதனை படைத்தாக தகவல் வெளியானது.

ஒடிடி தளங்கள் சினிமாவை ஆக்ரமிக்க முயன்ற முயற்சியை விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் முறியடித்தத்தால் ஒடிடி தளங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. மாஸ்டர் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் திரை அரங்குகள் மூட்டப்பட்டன. இதனால் மாஸ்டர் ரிலீஸ் செய்ய முடியாமலிருந்தது. 8 மாத காலத்தில் மாஸ்டர் படம் ஒடிடியில் வெளியாகிறது என்று அடிக்கடி வதந்திகள் கிளப்பட்டது. இது தியேட்டர் அதிபர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது. ஆனால் மாஸ்டர் படம் ஒடிடியில் வெளியாகாது. தியேட்டரில் தான் வெளியாகும் என்று விஜய் தரப்பும் மாஸ்டர் பட தரப்பும் வதந்திகளை முறியடித்தது. ஒரு கட்டத்தில் 50 சதவீத டிக்கெட் அனுமதி என்று அரசு அறிவித்தபோது மாஸ்டர் படம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. 100 சதவீத டிக்கெட் அனுமதி வரும்போது படம் வெளியிட முடிவு செய்யப்பட்டது. நடிகர் விஜய் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டார்.

தியேட்டர் அதிபர்கள் சங்கமும் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு அரசிடம் கோரியது. அரசும் அனுமதி வழங்கியது. மாஸ்டர் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டது. மாஸ்டர் வெளியானால் மீண்டும் தியேட்டருக்கு ரசிகர்கள் வரத் தொடங்கி விடுவார்கள் ஒடிடி தளங்கள் பாதிக்கப்படும் என்று பேசப்பட்டது. இதற்கிடையில் கொரோனாவை காரணம் காட்டி மீண்டும் 50 சதவீத டிக்கெட் முறைக்கு அரசு உத்தரவை மாற்றினர். இப்படி செய்தால் மாஸ்டர் தியேட் டரில் வெளியாகாது என்று சிலர் போட்ட கணக்குகளை முறியடித்து படம் தியேட்டரில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. 2 வது வாரத்தில் ரூ 200 கோடி வசூலை ஈட்டி சாதனை புரிந்துள்ளது. இது ஒடிடி தளங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தியேட்டரில் வெளியானால் படங்கள் வசூல் இருக்காது என்று பேசப்பட்ட வாய்கள் மூடிக்கொண்டன.

மாஸ்டர் தியேட்டர் வசூலை கண்டு இரண்டு பெரிய படங்கள் ஒடிடி தளத்தில் நடத்தி வந்த பேச்சை நிறுத்திக்கொண்டு தியேட்டர் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. விஷால் நடித்துள்ள சக்ரா, கார்த்தி நடித்துள்ள சுல்தான் ஆகிய படங்களை ஒடிடியில் வெளியிட பேச்சு நடந்தது. தற்போது அதிலிருந்து பின்வாங்கி தியேட்டரில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கோலிவுட்டில் பேச்சு நிலவுகிறது. ஏற்கனவே சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தை ஒடிடியில் வெளியிட சில ஒடிடி தளங்கள் பேச்சு வார்த்தை நடத்து 30 கோடி வரை தருவதாக கூறிய போதும் படத்தை தியேட்டரில்தான் முதலில் வெளியிடுவது என்ற முடிவுடன் இருந்த தாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதன்படி படம் தியேட்டரில் வெளியாகி லாபகரமான வசூல் ஈட்டி உள்ளது. ஒடிடி தளங்களில் ஹீரோக்களுக்கு வருமானம் அதிகம் கிடைக்கும் ஆனால் ரசிகர்கள் கூட்டம் ஒரு கட்டத்தில் இல்லாமல் போய்விடும். ஒரு கட்டத்தில் அவர்களும் டிவி சீரியல் நடிகர்கள் போலாகி விடுவார்கள் என்று கோலிவுட்டில் சிலர் முணுமுணுக்கின்றனர்.

More News >>