படப்பிடிப்புக்கு முன் செல்லத்துடன் நேரம் செலவிட்ட ஹீரோ..

திரைப்பட நட்சத்திரங்கள் பலர் தங்கள் வீட்டில் வெளிநாட்டு நாய்கள் வாங்கி வளர்க்கின்றனர். சில நடிகைகள் பூனை வளர்க்கின்றனர். எந்த நடிகர், நடிகைக்கு வீட்டுக்குள் நுழையும் முன்பும் நம்மை பயமுறுத்துவது அவர்கள் வளர்க்கும் நாய்கள் தான்.காதல் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் காதல் நாயகனாக வலம் வந்து இளவட்ட ரசிகைகளை ஏராளமாக வசப்படுத்தி வைத்திருக்கிறார். சமீபகாலமாக மாஸ் ஹீரோக்கள் அதாவது ஆக்‌ஷன் ஹீரோக்கள்தான் கொடிகட்டி பறக்கின்றனர். சம்பள விஷயத்திலும் சரி, ரசிகர்களின் ஆதரவும் சரி ஆக்‌ஷன் ஹீரோக்களுக்குதான் அதிகம். அந்த ஆசை விஜய் தேவர்கொண்டாவுக்கும் வந்திருக்கிறது. அதை புரிந்துகொண்ட டோலிவுட் இயக்குனர் புரி ஜெகநாத் ஆக்‌ஷன் கதையை விஜய் தேவர கொண்டாவிடம் கூற அவரும் நடிக்க சம்மதித்தார்.

இதற்காக உடற்தோற்றத்தை கட்டுமஸ்தாக்க ஜிம்மிற்கு சென்று பயிற்சியாளரிடம் முறைப்படி பயிற்சி பெற்று சிக்ஸ்பேக் தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். தெலுங்கு இந்தி என இருமொழிகளில் விஜய் தேவர கொண்டா நடிக்க உள்ளார். இப்படம் மூலம் முதன்முறையாக இந்தியில் அறிமுகமாகிறார். தெலுங்கில் புரி ஜெகநாத் அவரது பார்ட்னர் நடிகை சார்மி இணைந்து தயாரிக்க இந்தியில் கரண் ஜோஹர் தயாரிக்கிறார். இப்படத்துக்கு லைகர் என பெயரிடப்பட்டிருக்கிறது. லைகர் என்றால் ஆண் சிங்கத்துக்கும் பெண் புலிக்கும் இணைந்து பிறந்த குட்டியாம். கொரோனா காலத்தால் இப்படத்தின் தள்ளிப்போய்க் கொண்டிருந்த நிலையில் இன்னும் சில தினங்களில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்புக்கு செல்லவிருக்கும் விஜய் தேவர்கொண்டாவுக்கு தான் வளர்க்கும் செல்ல நாயை பிரிந்து செல்லவிருப்பது வருத்தம் அளித்திருக்கிறதாம்.

அதனால் கடந்த சில நாட்களாக அந்த நாயுடனே நேரத்தை செலவிட்டு வருகிறார். கடந்த ஆண்டு வாங்கி வந்த செல்லாக் குட்டி நாய் தற்போது வளர்ந்த ஓநாய் போல் இருக்கிறது. அந்த நாயை கண்டாலே நடுக்கம் வந்துவிடும் அப்படி தீனி போட்டு வளர்த்திருக்கிறார். நாயை தன் மடி மீது நிற்க வைத்து மொட்டை மாடியில் அமர்ந்து அதற்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கும் விஜய் தேவர கொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த படத்தை வெளியிட்டு, படப்பிடிப்புக்கு செல்லும் முன் உன்னுடன் (வளர்ப்பு நாயுடன்) சில நாட்கள் பொழுதை கழிக்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே இந்தியில் நடிக்க உள்ளதுபற்றி விஜய் தேவர கொண்டா கூறும்போது, தேசிய அளவில் பான் இந்தியா படம் லைகர் மூலம் வருகிறேன். நாடு முழுவதுக்குமான கொண்டாட்ட படமாக இது இருக்கும் என குறிப்பிட்டார்.

More News >>