யானை தாக்கி பேச்சு இழந்த பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு: அரசு வேலையும் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சமயபுரம் கோவில் யானை தாக்கி பேச்சு இழந்த பெண்ணுக்கு 25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சிந்து லெட்சுமி. கடந்த 3.10.1999-ல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ராஜேந்திரன் குடும்பத்துடன் . அப்போது சிந்துவுக்கு 3 வயது சிறுமி. கோவிலில் தரிசனம் முடிந்ததும் கோவில் வளாகத்தில் போய் கொண்டிருந்த போது அங்குள்ள கோவில் யானை பிளிறியபடி தும்பிக்கையால்சிறுமி சிந்துவை தாக்கியது. இதனால் சிந்துவின் குரல்வளம் முழுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் பேசும் திறனையும் அவர் இழந்தார். சிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுவாசிப்பதற்காக தொண்டையில் துளையிடப்பட்டு செயற்கை கருவி பொருத்தப்பட்டுள்ளது.

அந்த குழாய் வழியாகத்தான் திரவ உணவை மட்டுமே உண்டு வாழ்ந்து வருகிறார். இந்த சிக்கலான சூழ்நிலையிலும் சிந்து இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றார் முடித்தார். இதனிடையே கோவில் யானை தாக்கியதால் பாதிக்கப்பட்டதற்கு இழப்பீடு கேட்டு அரசுக்கு மனு கொடுக்கப்பட்டது.ஆனால் 20 ஆண்டுகள் ஆகியும் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சிந்து தனக்கு 50 லட்சம் இழப்பீடு மற்றும் தன் கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோவில் நிர்வாகம் யானையை சரியாக பராமரிக்காமல் விட்டுள்ளனர்.

இதனால் யானை என்னையும், தாயாரையும் தாக்கியது. என் தாயார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். நான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து இழப்பீடு வழங்கவும், மருத்துவ சிகிச்சை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் எனக்கு எந்த இழப்பீடும் அளிக்கப்படவில்லை. மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யவில்லை என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணன் ராமசுவாமி விசாரித்து கோவில் வளாகத்தில் மனுதாரரை யானை தாக்கியதற்கு கோவில் நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே மனுதாரருக்கு அரசு வேலையும், 25 லட்சம் இழப்பீடும் 4 வாரத்தில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

More News >>