எடப்பாடியின் ஊழல்களுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரி.. ஸ்டாலின் சொல்லும் அவர் யார்?

ஒவ்வொரு துறையிலும் அட்வைசர்களை நியமித்து - அவர்களுக்கு எல்லாம் ஒரு தலைமை அட்வைசரைப் போட்டு, பல்வேறு துறைகளையும் ஊழலுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரியின் பொறுப்பில் விட்டு அலங்கோலமான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழக சட்டசபை இன்று(பிப்.2) காலை 11 மணிக்குக் கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் புரோகித் உரையாற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து அவர் தனது உரையை வாசிக்கத் தொடங்கியதும், திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து எதிர்ப்புக் குரல் எழுப்பினர். பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கவர்னர் உரையைப் புறக்கணிப்பதாகக் கூறி விட்டு, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்களின் மீது ஆதாரங்களுடன், 22.12.2020 அன்று, நேரில் கொடுக்கப்பட்ட 97 பக்க ஊழல் புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் இதுவரை விடுதலை செய்யாமல், அமைச்சரவைத் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டிருக்கும் தமிழக கவர்னரின் செயலைக் கண்டித்து, மக்கள் விரோத அ.தி.மு.க. அரசின் கவர்னர் உரையை திமுக புறக்கணிக்கிறது.

பத்தாண்டுக் கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளதுடன், மாநிலத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுக்காலம் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது. அ.தி.மு.க. அமைச்சர்கள் ஊழலின் மூலம் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பும், கொள்ளையடித்த பணமும், தமிழகத்திற்கே தனி பட்ஜெட் ஒன்றைத் தயாரிக்கும் அளவிற்கு மலை போல் குவிந்து - சுதந்திர இந்தியாவில் இப்படியொரு ஊழல் ஆட்சி இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லை - ஏன், 1991-1996 அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்களையே விஞ்சி நிற்கிறது முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் தற்போதைய ஊழல்கள்.டெண்டர்களில் ஊழல், புதிய நியமனங்களில் ஊழல், நிர்வாக மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளில் ஊழல், சீருடைப் பணியாளர் தேர்வாணைய மற்றும் அரசுப் பணியாளர் தேர்வாணைய நியமனத்தில் ஊழல் என அனைத்து தேர்வாணையங்களின் நம்பகத்தன்மை, வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் வெகுவாக அ.தி.மு.க. ஆட்சியில் சீரழிக்கப்பட்டு விட்டது.

கொரோனா ஊழல் அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது நடைபெற்று வரும் கடைசிக்கட்டக் கொள்ளை! முதலமைச்சர், உட்கட்சித் தலைமைப் போராட்டத்தில் தன்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ளும் நோக்கில், அரசுப் பணத்தில் கடந்த 3 மாதங்களாக, ஏடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து செய்யப்படும் ஏமாற்று விளம்பரங்கள்! அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தின் மாண்பு சிதைக்கப்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடம் இல்லை.மத்திய பா.ஜ.க. அரசின் அடிவருடியாக இருந்து முதலமைச்சர் பழனிசாமி “முத்தலாக்” சட்டத்தை ஆதரித்தது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தது, மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து வாக்களித்து - இப்போது இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் பா.ஜ.க.விற்கு துணை போவது, அகில இந்தியக் கோட்டாவிற்கு ஒதுக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெறாமல் வஞ்சித்தது - அரசு மருத்துவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டையும் கொடுக்க மறுத்தது - புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக ஆதரிப்பது - தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு பறிபோவதை வேடிக்கை பார்ப்பது என அ.தி.மு.க. ஆட்சியால் தமிழகத்திற்கு நேர்ந்திருக்கும் அநீதிகள் ஏராளம்! கூவத்தூரில் ஊர்ந்து முதலமைச்சரான பழனிசாமியின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதுதான் தமிழக மக்களின் ஆர்வம் மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவி வழங்க முடியாது எனக் கூறி விட்டு - அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவு தெரியாமலே - தெரிந்து கொள்ள அக்கறை காட்டாமலே - 80 கோடி ரூபாயில் அவருக்கு நினைவிடம் அமைப்பது, தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று முன்னிறுத்திக்கொள்ள அரசுப் பணத்தில் 1000 கோடி ரூபாய் விளம்பரம் என, தமிழகத்தை சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கடித்து - மிகப்பெரிய நிதி நெருக்கடியை உருவாக்கி வைத்திருக்கிறார் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எந்த நேரத்திலும் சந்திக்க வேண்டிய முதலமைச்சர் பழனிசாமி.ஒவ்வொரு துறையிலும் அட்வைசர்களை நியமித்து - அவர்களுக்கு எல்லாம் ஒரு தலைமை அட்வைசரைப் போட்டு - துறையில் உள்ள மூத்த அரசு அதிகாரிகளையும் - அரசு ஊழியர்களையும் - ஏன் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் புறக்கணித்து, பல்வேறு துறைகளை ஊழலுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரியின் பொறுப்பில் விட்டு, ஓர் அலங்கோலமான நிர்வாகத்தை 4 ஆண்டுகள் அனைத்து மட்டத்திலும் நடத்தி - நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் ஆசிரியர்களை - அரசு ஊழியர்களை - செவிலியர்களை - மருத்துவர்களை உதாசீனப்படுத்தி, தனிச்சிறப்பு வாய்ந்த தமிழக அரசு நிர்வாக இயந்திரத்தை பத்தாண்டு காலம் அ.தி.மு.க. அரசு பழுதடைய வைத்து விட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.

“ஊழல் செய்வோருக்கே இந்த ஆட்சி” என்ற வகையில் லோக் ஆயுக்தா - உள்ளாட்சிகளின் ஊழல்களை விசாரிக்கும் ஆம்புட்ஸ்மேன் அமைப்பு எல்லாம் முடக்கப்பட்டு - விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், ஏழை - எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் - ஜனநாயக மாண்புகளுக்கும் - அரசியல் சட்டத்திற்கும் இழுக்கை ஏற்படுத்திய அ.தி.மு.க. ஆட்சியின் சட்டமன்றக் கூட்டத் தொடரை திமுக புறக்கணிக்கிறது.இவ்வாறு கூறியுள்ளார்.இந்நிலையில், கவர்னர் உரை மீதான விவாதத்தில் திமுக பங்கேற்காது. மீண்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று திமுகவினர் சட்டசபைக்கு வருவார்கள் எனத் தெரிகிறது.

More News >>