ரஜினி அரசியலுக்கு எந்த காலத்திலும் வர மாட்டேன் என்று சொல்லவில்லை.. தமிழருவி மணியன் அறிக்கையால் பரபரப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் அரசியல் கட்சி தொடங்கும் தேதி அறிவிப்பதாகவும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். அப்போது தமிழருவி மணியன் ரஜினி கட்சியில் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டார். ஆனால் உடல்நிலை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என்னை மன்னித்து விடுங்கள் என்று ரஜினிகாந்த் கூறினார். பின்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் ரஜினி மன்றத்தினர் தாங்கள் விரும்பும் கட்சியில் சேரலாம் என்று அறிவித்தார். அதன்படி ரஜினி மன்றத்தினர் பலர் வேறு கட்சியில் இணைந்தனர். ரஜினிக்கு நெருக்கமாக இருந்த தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மன்றத்தினர் பலர் சேர விருப்பம் தெரிவித்து அணுகினர்.

இதுகுறித்து தமிழருவி மணியன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் ரஜினி மன்றத்தினர் என் கட்சியில் சேர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருப்பதுடன் ரஜினி எந்த காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறவில்லை எனப் பொடி வைத்துக் குறிப்பிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:காந்திய மக்கள்‌ இயக்கத்தில்‌ ரஜினி மக்கள்‌ மன்றத்தைச்‌ சார்ந்த பலர்‌ இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன்‌ தொடர்பு கொள்கின்றனர்‌. ரஜினி மக்கள்‌ மன்றத்தில்‌ உள்ளவர்களுக்கு அன்புடன்‌ ஒன்றை உணர்த்த விரும்புகிறேன்‌.

நீங்கள்‌ அனைவரும்‌ ரஜினி ஒருநாள்‌ அரசியல்‌ களத்தில்‌ அடியெடுத்து வைப்பார்‌ என்றஎதிர்பார்ப்பிலும்‌, முதல்வர்‌ பதவியில்‌ என்றாவது அமர்வார்‌ என்ற கனவிலும்‌ அவருடைய ரசிகர்களாக மாறவில்லை. அவருடைய இயல்பான நடிப்பு, செயற்கைப்‌ பூச்சு இல்லாத பேச்சு, ஆணவத்திற்கு‌ சற்றும்‌ இடம்‌ தராத அடக்கம்‌, உள்ளத்தில்‌ பட்டதை ஒளிவு மறைவின்றி உரைக்கும்‌ நேர்மை, மிகச்‌ சாதாரண மனிதனாகத்‌ தன்னைப்‌ பாவிக்கும்‌ பண்பு நலன்‌, அனைவரும்‌ வியந்து பார்க்கும்‌ ஆடம்பரமற்ற எளிமை, அன்பு சார்ந்து ஒவ்வொருவரிடமும்‌ பழகும்‌ உயர்குணம்‌ ஆகியவற்றில்‌ உங்கள்‌ மனதைப்‌ பறிகொடுத்துத்தான்‌ நீங்கள்‌ அனைவரும்‌ அவருடைய ரசிகர்களாக மாறினீர்கள்‌ என்பதுதான்‌ மறுக்க முடியாத உண்மை. அவருக்காக எதையும்‌ இழக்கத்‌துணியும்‌ உங்கள்‌ உயரிய அர்ப்பணிப்பைக்‌ கடந்த நான்காண்டுகள்‌ நேரில்‌ கண்டு நான்‌ நெஞ்சம்‌ நெகிழ்ந்திருக்கிறேன்‌.

பாழ்பட்ட அரசியலைப்‌ பழுது பார்க்கவே ரஜினி அரசியல்‌ உலகில்‌ அடியெடுத்து வைக்க முயன்றார்‌. காலச்சூழல்‌ அவருடைய கனவை நனவாக்க இடம்‌ தராத நிலையில்‌ இப்போது அவர்‌ கட்சி தொடங்குவதைத்‌ தவிர்த்திருக்கிறார்‌. நான்‌ எப்போதும்‌ அரசியலில்‌ அடியெடுத்து வைக்கப்‌ போவதில்லை என்று அவர்‌ அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள்‌ மன்றத்தை அவர்‌ கலைத்து விடவுமில்லை. இந்த நிலையில்‌ அவருடைய கூற்றின்படி சிஸ்டத்தைச்‌ சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள்‌ சரண்‌ அடைந்திருப்பதையும்‌, சிலர்‌ இளைப்பாறும்‌ வேடந்தாங்கல்‌ ஏதுவாக இருக்க முடியும்‌ என்று அலைபாய் வதையும்‌ கண்டு நான்‌ வருந்துகிறேன்‌. ரஜினி மக்கள்‌ மன்றத்திலிருந்து ஆள்‌ பிடிக்கும்‌ அநாகரிக அரசியலை நான்‌ அடியோடு வெறுக்கிறேன்‌. காந்திய மக்கள்‌ இயக்கம்‌ இந்த சந்தர்ப்பவாத செயலில்‌ மறந்தும்‌ ஈடுபடாது என்று உறுதிப்பட அறிவிக்கிறேன்‌.

காந்திய மக்கள்‌ இயக்கம்‌, ரஜினி மக்கள்‌ மன்றத்தின்‌ சகோதர அமைப்பாகத்‌ தொடர்ந்து செயற்படும்‌. அவரவர்‌ இடத்தில்‌ இருந்தபடி கரங்கள்‌ இணைந்து காரிய மாற்றுவோம்‌. நான்‌"ஒரு காந்தியவாதி இறக்கும்‌ நாள்வரை இடையறாமல்‌ தன்னலமின்றி சமூக நலன்‌ சார்ந்து இயங்கிக்‌ கொண்டே இருக்க வேண்டும்‌. இழிந்த விமர்சனங்களை இம்மியும்‌பொருட்படுத்தலாகாது. மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும்‌ பணியில்‌ நீங்கள்‌ தொடர்ந்து ஈடுபட வேண்டும்‌ “என்று சான்றாண்மை மிக்க மூத்தோர்‌ பலர்‌ வழங்கிய அறிவுரையை ஏற்கிறேன்‌.தரம்‌ தாழ்ந்த, தன்னலம்‌ வாய்ந்த அரசியலை என்றும்‌ நான்‌ நடத்தியதில்லை. எந்த லாவணிக்‌ கச்சேரியிலும்‌ ஒரு நாளும்‌ நேரத்தை விரயமாக்காமல்‌ ஆக்கப்பூர்வமான அர்த்தமுள்ள பணிகளில்‌ காந்திய மக்கள்‌ இயக்கம்‌ முன்னிலும்‌ முனைப்பாக ஈடுபடும்‌.மார்ச் ‌7ஆம்‌ நாள்‌ திருப்பூரில்‌ பொதுக்குழு கூடவிருக்கிறது. நாளையே ரஜினி அரசியலுக்குவந்தாலும்‌ காந்திய மக்கள்‌ இயக்கம்‌ அவருடன்‌ சேர்ந்தே பயணிக்கும்‌. அவர்‌ அரசியலுக்கு வந்தாலும்‌, வராமல்‌ விலக இருந்தாலும்‌ பக்தி பூர்வமாக அவரை நெஞ்சில்‌ நிறுத்தி நேசிக்கும்‌ எந்த மன்ற உறுப்பினரும்‌ எவர்‌ விரிக்கும்‌ வலையிலும்‌ சிக்கமாட்டார்கள்‌ என்பது மட்டும்‌ உறுதி.இவ்வாறு தமிழருவி மணியன் கூறி உள்ளார்.

எந்த காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறவில்லை. ரஜினி மன்றத்தை அவர் கலைத்துவிடவில்லை என்று தமிழருவி மணியன் கூறியிருப்பது ரஜினி மீண்டும் அரசியலுக்கு வருவார் என்று சிக்னல் கொடுப்பதுபோல் இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>