இனிப்பு பண்டம் கேட்டு அழுத 20 மாத குழந்தையை சுவரில் அடித்துக் கொன்ற கொடூரம் தந்தை கைது

இனிப்புப் பண்டம் கேட்டு அழுத 20 மாத தன்னுடைய பெண் குழந்தையைக் கோபத்தில் சுவரில் அடித்து தந்தை கொடூரமாகக் கொலை செய்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது கோண்டியா மாவட்டம். இங்கு லோனாரா என்ற கிராமம் உள்ளது. இது மும்பையில் இருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக் (28). இவருக்கு மனைவியும், 20 மாதம் ஆன ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்களது திருமணம் கடந்த 2018ல் நடந்தது. விவேக்கிற்குக் குடிப்பழக்கம் உண்டு. குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து உதைப்பது இவரது வழக்கம்.

இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்படுவது உண்டு. இதனால் திருமணம் ஆன ஒரு சில மாதங்களிலேயே கணவனின் தொல்லை பொறுக்க முடியாமல் அவரது மனைவி தன்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். இதன் பின்னர் அவரது பெற்றோர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதன்பிறகு அவர் கணவனின் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று விவேக்கின் குழந்தை கோதுமை மாவில் தயாரிக்கப்படும் காஜா என்ற இனிப்பு பண்டத்தைக் கேட்டு அழுதுள்ளது. இதனால் அந்த பண்டத்தை வாங்குவதற்காக விவேக்கிடம் அவரது மனைவி 5 ரூபாய் கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த விவேக், குழந்தையைத் தூக்கி வீட்டுக் கதவில் பலமுறை பலமாக அடித்துள்ளார். அவரது மனைவி எவ்வளவோ தடுத்தும் விவேக்கிடமிருந்து குழந்தையை மீட்க முடியவில்லை. தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து விவேக்கின் மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விவேக்கைக் கைது செய்தனர்.

More News >>