மனைவியுடன் தகராறு தாயைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட மகன்

மனைவியுடன் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தன்னுடைய தாயை கழுத்தை நெறித்துக் கொன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை அருகே உள்ளது பெருங்கடவிளை கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி மோகன குமாரி (62). இவர்களுக்கு விபின் (32) என்ற ஒரே ஒரு மகன் இருந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

விபின் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விபின் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் விபினின் மனைவிக்கும், மோகன குமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த முடியாமல் விபின் தவித்து வந்தார்.தகராறு ஏற்படும் சமயங்களில் விபினின் மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். நேற்றும் வழக்கம் போல மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து விபினின் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வழக்கம் போல தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இது விபினுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று பகலில் அப்பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு மரத்தில் விபின் தூக்குப்போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதைப் பார்த்த அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து விபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது மோகன குமாரி படுக்கையில் இறந்த நிலையில் காணப்பட்டார்.

இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் மோகன குமாரி கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து குடும்பத் தகராறில் விபின், தாயின் கழுத்தை நெறித்துக் கொன்று பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

More News >>