நான் இந்தியன் என்பதே எனக்கு அதிர்ஷ்டம் தான்: பாரத ரத்னா கோரிய ரசிகர்களுக்கு ரத்தன் டாடா பதில்!

நான் இந்தியன் என்பது எனது அதிர்ஷ்டம் என்று பாரத ரத்னா கோரிக்கை விடுக்கும் அவரது ரசிகர்களுக்கு ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், டாடா அறக்கட்டளையின் தலைவருமான ரத்தன் டாடாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ரத்தன் டாடா தனது டுவிட்டர் பக்கத்தில், நான் இந்தியன் என்பது எனது அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டு, எனக்கு ஒரு விருது கொடுக்க வேண்டுமென சமூக ஊடகங்களில் ஒரு சிலர் வெளிப்படுத்திய அவர்களது உணர்வுகளை நான் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் இதுபோன்ற செயல்களை கூடுமான வரையில் உடனடியாக நிறுத்த வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மாறாக நான் ஒரு இந்தியனாக இருப்பதும், இந்தியாவின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பதற்காகவும் நான் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் தனது அலுவலகத்தில் பணியாற்றியவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறிந்த ரத்தன் டாடா அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மத்திய அரசு சார்பில், ஏற்கனவே, ரத்தன் டாடா பத்ம விபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>