லிவர் பாதிக்கப்படுமோ என்ற பயமா? இவற்றை தவிர்த்தால் ஈரலை பாதுகாக்கலாம்...

செரிமான குழலில் இருந்து வரும் இரத்தம் உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் முன்பு அதைச் சுத்தம் செய்வதே ஈரலின் முதன்மை பணியாகும். வேதிப்பொருள்களின் நச்சுத்தன்மையை அகற்றுவதோடு, மருந்துகளை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்துவதும் ஈரலின் வேலையாகும். ஈரல், பித்த நீரை சுரக்கிறது. கொலஸ்ட்ரால், ஹார்மோன்களை வெளியேற்றுவதும் இதன் பணியாகும். ஈரல் பாதிக்கப்படும்போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.நம் நாட்டில் மரணம் அடைபவர்களில் 3 சதவீதத்தினர் ஈரலில் ஏற்படும் நோய்களில் உயிரிழக்கின்றனர். நாம் சாப்பிடும் உணவு, அருந்தும் பானம் இவை நம்முடைய ஈரலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஈரலை அதிக அளவு பாதிக்கக்கூடிய உணவு மற்றும் பானங்களைத் தவிர்த்தால் நலமாக வாழ முடியும்.

சுவையூட்டப்பட்ட பானங்கள்

பொதுவாக, மது அருந்துதல் ஈரலுக்கு மிகவும் தீங்கை விளைவிக்கக்கூடியது என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். மது மட்டுமல்ல, இனிப்பூட்டப்பட்ட அனைத்து பானங்களுமே ஈரலுக்கு தீங்கிழைக்கக்கூடியவைதாம். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் அதிக அளவு ஃப்ரக்டோஸ் காணப்படுகிறது. இந்த ஃப்ரக்டோஸ், ஈரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ்

இப்போது அனைவரும் விரும்பி சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் ஒன்று ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் ஆகும். ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் கலோரிகள் அதிகமானது மட்டுமல்ல; அதில் சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் எனப்படும் பூரித கொழுப்பு உள்ளது. இது ஈரலில் கொழுப்பின் அளவை அதிகரிப்பதோடு, இன்சுலினை ஏற்றுக்கொள்ளாத தன்மையையும் உடலில் உருவாக்கும்.

ஒயிட் பிரட்

ஒயிட் பிரட் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைடிரேடு அடங்கியது. இதில் நார்ச்சத்து கிடையாது. ஆகவே, ஒயிட் பிரட் சாப்பிட்டதும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்கும். ஆகவே ஒயிட் பிரட்டையும் பிரௌன் பிரட்டையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

தாவர எண்ணெய் (வெஜிடபிள் ஆயில்)

தாவர எண்ணெயில் ஒமேகா 6 கொழுப்பு உள்ளது. இந்த எண்ணெய்யைக் கொண்டு சமைக்கும்போது ஒமேகா 6 விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது. ஆக்ஸிஜனேற்றம் அடைந்த ஒமேகா 6 சத்து ஈரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

அதிக அளவு உப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது உடலில் தங்கும் நீரின் அளவும் அதிகரிக்கும். ஆகவே பதப்படுத்தப்பட்ட மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். சிப்ஸ், பிஸ்கட் ஆகியவற்றில் அதிக அளவு பூரித கொழுப்பு மற்றும் உப்பு இருப்பதால் அவை ஈரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

விலங்கு இறைச்சி

விலங்குகளின் மாமிசத்தில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இதைச் செரிக்கும்போது ஈரல் நச்சுத்தன்மையாகிறது. புரதங்களை உடைக்கும்போது ஈரல் அதிக அளவு உழைக்கிறது. இது பல்வேறு வகையான ஈரல் தொடர்பான ஆரோக்கிய குறைபாடுகளுக்குக் காரணமாகிறது.

இந்த உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்த்தால், ஈரலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

More News >>