ஊழியர்கள் மிகப்பெரிய சொத்து: உலகளவில் உள்ள ஊழியர்களுக்கு ரூ.700 கோடி போனஸ் அறிவித்தது ஹெச்.சி.எல். நிறுவனம்

சென்னை: உலகளவில் உள்ள தனது ஊழியர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனம் ரூ.700 கோடி மதிப்புள்ள ஒன்-டைம் போனஸை அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் நிறுவனம், 2020-ம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில், ரூ.700 கோடி மதிப்புள்ள ஒன்-டைம் சிறப்பு போனஸை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு போனஸ் மூலம் சுமார் 1 லட்சத்து 59 ஆயிரம் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் போனஸ் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக, ஹெச்.சி.எல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் ஊழியர்களே நிறுவனத்திற்கு மிகப்பெரிய சொத்து. சவாலான கொரோனா காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஆர்வமுடனும் ஊழியர்கள் பணியாற்றினார். அதன் பலனாகவே 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இலக்கை எட்டியுள்ளோம்.

இந்நேரத்தில் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.சி.எல் நிறுவனம், கடந்த நான்கு ஆண்டுகளில் மதுரை, லக்னோ மற்றும் நாக்பூர், விஜயவாடா உள்ளிட்ட மையங்களில் 15,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. மேலும், ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்பினால், விண்ணப்பிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.

More News >>