இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவை உலக சாதனை படைக்குமா?

சென்னை டெஸ்ட் போட்டி தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இது ஒரு உலக சாதனையாக இருக்கும்.சென்னை டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து, கேப்டன் ஜோ ரூட்டின் அபார இரட்டை சதத்தால் 578 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் ஆடிய இந்தியா, இங்கிலாந்து பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சால் 337 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் ஆஸ்திரேலியாவை விட இந்தியா 241 ரன்கள் பின்தங்கியது. இந்தியா பாலோ ஆன் பெற்ற போதிலும் இங்கிலாந்து மீண்டும் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் முதல் இன்னிங்சைப் போல அவர்களால் சிறப்பாக ஆட முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினின் சுழலில் சிக்கி இங்கிலாந்து 178 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதையடுத்து இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 420 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

நேற்று இந்தியா தங்களுடைய 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். மிக கடினமான இலக்காக இருந்த போதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இருவரும் அதிரடியாக ஆடத் தொடங்கினர். ஆனால் ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 25 ரன்களிலேயே இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. இதன் பின்னர் கில்லுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. கில் 15 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர். இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவையாகும். இந்தியாவின் கைவசம் இன்னும் 9 விக்கெட்டுகள் உள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் இந்தியாவின் திட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் சாகச வெற்றி பெற்றதால் உள்ளூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியிலும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று இந்திய வீரர்கள் கருதுகின்றனர். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இது ஒரு உலக சாதனையாக இருக்கும் என கருதப்படுகிறது. 2003ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி 418 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது தான் இதுவரை உலக சாதனையாக இருக்கிறது. தற்போது 420 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றால் இது ஒரு புதிய சாதனையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More News >>