ஐஸ்விற்கும் சமுத்திரக்கனி படத்துக்கு திடீர் சிக்கல்.. தியேட்டரா? ஒடிடியா?

பூவரசம் பீப்பீ, சில்லுகருப்பட்டி வெற்றிப் படங்களை இயக்கிய ஹலீதா சமீம் அடுத்து இயக்கி உள்ள படம் ஏலே. சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.ஒய் நாட் ஸ்டுடியோஸ் (Y Not Studios) நிறுவனமும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Reliance Entertainment) நிறுவனமும் இணைந்து வழங்குகிறது. எஸ்.சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தை இணை தயாரிப்பு செய்துள்ளார் சக்ரவர்த்தி ராமசந்திரா. படைப்பாளிகள் புஷ்கர் & காயத்திரி ( விக்ரம் வேதா புகழ் ) Wallwatcher Films சார்பில் முதல் படைப்பாக இப்படத்தினை கிரியேட்டிவ் புரடக்சன் செய்துள்ளனர்.இசை காபெர் வாசுகி, அருள் தேவ். ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர். கலை இயக்கம் வினோத் ராஜ்குமார். படத் தொகுப்பு ரேமண்ட் டெரிக் கிரஸ்டா, ஹலிதா சமீம். சண்டைப்பயிற்சி சூப்பர் சுப்பராயன். வரும் 12ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

இப்படம்பற்றி சமுத்திரக்கனி கூறும்போது,ஏலே கதையை ஹலிதா 9 வருடத்துக்கு முன் என்னிடம் சொன்னார். பிறகு 3 வருடத்துக்கு முன்பு சொன்னார். மீண்டும் என்னை அணுகி ஏலே படம் தயாராக உள்ளது. புஷ்கர் காயத்ரி, ஒய்நாட், ரிலையன்ஸ் போன்றவர்கள் இணைந்து தயாரிக்கின்றனர். நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். நடிப்பது என்பது முடிவாகிவிட்டதால் மீண்டும் ஏலே கதையைச் சொல்லச் சொன்னேன். எதார்த்தமான கதை. ஹலிதா எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். ஆனால் படப்பிடிப்பில் அவர் வேறுமாதிரி இருப்பார். ஒரு இடத்தில் நிற்கமாட்டார். பிடிவாதம் அதிகம் இந்த காட்சி வேண்டும் என்றால் அதையடுத்தே தீர்வார் என்றார்.

இப்படம் ஏற்கனவே பிப்ரவரி 12ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. அதேசமயம் அப்படத்தை 27ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியிடவும் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்து ஏலே படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய தியேட்டர் அதிபர்கள் மறுக்கிறார்களாம்.ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரி 13ம் தேதி தியேட்டரில் வெளியானது சில நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்தது இதையடுத்து ஒடிடி தளத்தில் மாஸ்டர் வெளியிடுவதாக அறிவித்தபோது அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சில தியேட்டர்களில் அப்படத்தை எடுத்துவிட்டனர். அப்போதே தியேட்டரில் படங்கள் வெளியிட்டால் 50 நாட்களுக்குப் பிறகு தான் ஒடிடி தளத்தில் படத்தை வெளியிட வேண்டும் தியேட்டர் அதிபர்கள் தீர்மானம் நிறைவேற்றியதுடன் அதற்கான கடிதமும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் தர வேண்டும் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. ஏலே படத் தயாரிப்பாளரிடம் அதுபோல் கடிதம் கேட்டபோது அவர்கள் தரவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து படத்தை தியேட்டரில் திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்துள்ளார்களாம். இதில் சமரசம் ஏற்படாவிட்டால் நேரியாக ஒடிடியில் ஏலே வெளியாகும் என்று தெரிகிறது.

More News >>