பயனர்களின் தரவுகளை லீக் செய்கிறதா கூ? - அதிர்ச்சி தகவல்

ட்விட்டர் போன்று இந்தியாவில் செயல்படும் தளம் 'கூ' (Koo)ஆகும். சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தோடு தொடர்புடைய சில கணக்குகளை அரசின் கோரிக்கையின் பேரில் முடக்குவதற்கு ட்விட்டர் நிறுவனம் மறுத்ததால் அதற்கு மாற்றாக 'கூ' செயலியை மத்திய அரசு அலுவலர்கள் பிரபலப்படுத்த ஆரம்பித்தனர். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தம்முடன் 'கூ' செயலியில் இணையும்படி பயனர்களை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

'கூ' (Koo) தளமானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டதாகும். மேசை கணினி, ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவற்றில் 'கூ' செயல்படுகிறது. இந்திய மொழிகளில் ட்விட்டருக்கு ஒத்த அனுபவத்தை 'கூ' (Koo) தரும் என்று கூறி அது பிரபலப்படுத்தப்படுகிறது. 'கூ' செயலி, அரசின் டிஜிட்டல் இந்தியா ஆத்மநிர்பார் பாரத் விருதைக் கடந்த ஆண்டு வென்றது.இந்திய சமூக ஊடக தளமான 'கூ' பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவதாக பிரான்ஸை சேர்ந்த இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராபர்ட் பாப்டிஸ்ட் கூறியுள்ளார்.

எலியட் ஆல்டர்சன் என்ற பெயரில் இயங்கி வரும் ராபர்ட் பாப்டிஸ்ட், ட்விட்டர் பயனர்களின் வேண்டுகோளின் பேரில் தாம் 'கூ' செயலியில் அரை மணி நேரத்தைச் செலவிட்டதாகவும், அது பயனர்களின் மின்னஞ்சல் முகவரி, பெயர், பாலினர், பிறந்த தேதி, திருமணமானவரா என்ற விவரம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தக்கூடியதாக இருப்பதாக ட்விட்டர் பதிவு மூலம் கூறியுள்ளார். 'கூ' செயலிக்கான தளம், சீனாவைச் சேர்ந்த ஒருவர் பேரில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ராபர்ட் பாப்டிஸ்ட் தெரிவித்துள்ளார்.

More News >>