அனுமதியின்றி சுங்க கட்டணம் வசூல்: மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

மதுரை மாநகராட்சியில் பை பாஸ் ரோட்டில் அரசின் அனுமதி இல்லாமல் முறைகேடாக வசூல் செய்யப்பட்ட சுங்க கட்டணம் 35 கோடியை ரூபாயை வாகன உரிமையாளரிடம் திருப்பி அளிக்கக் கோரிய வழக்கில் வசூலான தொகை எதற்காகச் செலவிடப்பட்டது அதற்கான அரசின் அனுமதி குறித்த விவரங்களை மாநகராட்சி தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உத்தங்குடி முதல் கப்பலூர் வரை சுற்றுச் சாலைகள் அமைக்கப்பட்டது உலக வங்கி மூலம் இதற்காகக் கடன் பெறப்பட்டு இந்த சுற்றுச் சாலைகள் அமைக்கப்பட்டது.

இந்த சாலைகளில் ஐந்து இடங்களில் சுங்கச் சாவடி அமைத்து வாகனங்களுக்குக் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. 15 ஆண்டுகளுக்குச் சுங்க கட்டணம் வசூல் செய்ய மதுரை மாநகராட்சிக்கு அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் உரியக் காலம் முடிவடைந்தும் தொடர்ந்து சுங்க கட்டணம் வசூல் செய்யப் பட்டது. எனவே சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவின்படி 5 சுங்கச்சாவடி மையங்களையும் மாநகராட்சி அகற்றியது.

அரசின் உரிய அனுமதி இல்லாமலும் சட்டவிரோதமாக மாநகராட்சி வசூல் செய்யப்பட்ட சுங்க கட்டணம் ரூபாய் 35 கோடி ரூபாய் பணத்தை உரிமையாளரிடம் திரும்பச் செலுத்த வேண்டும் என எனத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, கண்ணம்மாள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அரசின் அனுமதி இல்லாமல் கடந்த 2016ல் மட்டும் 35 கோடி ரூபாய் சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.இந்த பணத்தை மீண்டும் வாகன உரிமையாளரிடம் திரும்பச் செலுத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதலாக வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணம் மாநகராட்சி நலத் திட்டங்களுக்காகச் செலவு செய்யப்பட்டு விட்டது. இதற்கான அரசின் அனுமதியும் உள்ளது . எனவே பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாது என வாதிட்டனர். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மாநகராட்சி எந்த திட்டங்களுக்காகச் செலவுகள் செய்யப்பட்டது அதற்கான அரசின் அனுமதி ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

More News >>