கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரமாக சரிவு..

தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4,285 ஆகக் குறைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் புதிய பாதிப்பு நீடிக்கிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த வைரஸ் நோய் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்தது. தினமும் 100, 200 பேர் இந்த நோய்க்குப் பலியாயினர். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நோய்ப் பரவுவது குறையத் தொடங்கியது.

தற்போது இந்நோய் பற்றிய பயமே மக்களுக்குப் போய் விட்டது. இருதய நோய் உள்ளிட்ட வேறு நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமே பயத்தில் முகக்கவசம் அணிந்து கூட்டங்களுக்குச் செல்லாமல் முன்னெச்சரிக்கையாக இருக்கிறார்கள்.தமிழக அரசு நேற்று(பிப்.12) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 55 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 483 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 44,173 ஆக உயர்ந்தது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 486 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 27,480 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 6 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,408 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4285 ஆகக் குறைந்துள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மாவட்டத்திலும் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவது நீடிக்கிறது.சென்னையில் நேற்று புதிதாக 142 பேருக்கும், கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 45 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 21 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 20க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

More News >>