மகளின் 100 பவுன் திருமண நகைகளை ரெயிலில் வைத்து மறந்த பிரபல நடிகர்

பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான நாதிர்ஷா தன்னுடைய மகளின் 100 பவுன் திருமண நகைகளை ரெயிலில் வைத்து மறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த நகைகளை மீட்டு நாதிர்ஷாவிடம் ஒப்படைத்தனர்.மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நாதிர்ஷா. இவரை சகலகலா வல்லவன் என்று கூட அழைக்கலாம். நடிகராக மலையாள சினிமாவில் நுழைந்த இவர், பின்னர் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களை எடுத்தார்.

காசர்கோடு காதர்பாய் என்ற படத்தில் நகைச்சுவை நடிகராக மலையாள சினிமாவில் நுழைந்த இவர், மைடியர் குட்டிச்சாத்தான், நியூஸ் பேப்பர் பாய், மீனாட்சி கல்யாணம், மாயாஜாலம், இரண்டாம் பாவம், ராவண பிரபு, சுபராத்திரி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஏராளமான பாடல்களை எழுதியுள்ள இவர், 20க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியும் உள்ளார். சிங்காரவேலன், அமர் அக்பர் அந்தோணி, கட்டப்பனயிலே ஹிருத்விக் ரோஷன் உள்பட பல படங்களுக்கு இவர் இசையும் அமைத்துள்ளார். இது தவிர அமர் அக்பர் அந்தோணி, கட்டப்பனயிலே ஹிருத்விக் ரோஷன், மேரா நாம் ஷாஜி உள்பட 4 படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவரது மகள் ஆயிஷா மற்றும் காசர்கோட்டை சேர்ந்த பிலால் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன் கொச்சியில் நடந்தது. இதன் பின்னர் காசர்கோட்டில் திருமணம் நடந்தது. திருமணத்திற்காக நாதிர்ஷா தன்னுடைய குடும்பத்தினருடன் கொச்சியில் இருந்து ரயிலில் காசர்கோட்டுக்கு சென்றார். அப்போது மகளுக்கு வேண்டிய 100 பவுன் திருமண நகைகள் மற்றும் பொருட்களையும் அவர் கொண்டு சென்றிருந்தார். காசர்கோட்டில் ரெயிலில் இருந்து இறங்கிய போது திருமண நகைகள் அடங்கிய பேக்கை அவர் எடுக்க மறந்து விட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த நாதிர்ஷா உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து செயல்பட்டு ரெயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர். அதற்குள் அந்த ரெயில் மங்களூரை அடைந்தது. ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் நடத்திய பரிசோதனையில் சீட்டுக்கு அடியில் பேக் பத்திரமாக இருந்தது. அதை மீட்டு அவர் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த நகைகள் நாதிர்ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

More News >>