பிறந்த நாளா, திருமண நாளா, காதலர் தினமா ரோகித்துக்கு ஒரு செஞ்சுரி கட்டாயம்

மனைவியின் பிறந்த நாளோ, திருமண நாளோ அல்லது காதலர் தினமோ வந்தால் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோகித்துக்கு கொண்டாட்டம் தான்.... இந்த நிகழ்ச்சிகளை சமீபகாலமாக ஒரு செஞ்சுரி அடித்துத் தான் இவர் கொண்டாடி வருகிறார். சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் டாசில் விராட் கோஹ்லி வெற்றி பெற்றவுடன் இந்திய அணி வீரர்களுடன் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இந்திய அணி பேட்டிங் தொடங்கிய 2-வது ஓவரிலேயே சுப்மான் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி ரன் கணக்கை தொடங்க வில்லை. இதன் பின்னர் களமிறங்கிய புஜாராவும், கேப்டன் விராட் கோஹ்லியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 86 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தவித்ததுக் கொண்டிருந்தது.

முதல் டெஸ்டில் ஏற்பட்ட கதி தான் இந்த டெஸ்டிலும் இந்தியாவுக்கு ஏற்படுமோ என ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டது. ஆனால் ரோகித் சர்மாவும், துணை கேப்டன் அஜிங்கியா ரகானேவும் சேர்ந்து இந்தியாவை கரை சேர்த்தனர். ரோகித் சர்மா அற்புதமாக ஆடி 161 ரன்களும், அவருக்கு துணையாக நின்ற ரகானே 67 ரன்களும் குவித்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 162 ரன்கள் குவித்தனர். இதனால் தான் இந்தியா சிறிது பத்திரமான நிலையை எட்டியது. முதல் நாளில் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்தும், அக்சர் படேலும் களத்தில் இருந்தனர். ரோகித்தின் நேற்றைய செஞ்சுரிக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. என்னவென்றால், மனைவி ரிதிகாவின் பிறந்த நாளோ, தன்னுடைய திருமண நாளோ அல்லது காதலர் தினமோ வந்து விட்டால் அவருக்கு கொண்டாட்டம் தான். அப்போது அவருக்கு ஒரு செஞ்சுரி கட்டாயமாகும். டிசம்பர் 13ம் தேதி தான் ரோகித் மற்றும் ரிதிகாவின் திருமண நாள் ஆகும்.

கடந்த 2017 ம் ஆண்டு அன்று இலங்கைக்கு எதிராக ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் 208 ரன்கள் குவித்தார். டிசம்பர் 22ம் தேதி ரிதிகாவின் பிறந்த நாளாகும். அன்றும் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் 117 ரன்கள் குவித்தார். 2018ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி, அதாவது காதலர் தினத்திற்கு முந்தைய நாள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் ஒருநாள் போட்டியில் 117 ரன்கள் குவித்தார். அதேபோல இன்று காதலர் தினம், முந்தைய நாளான நேற்று இவர் 161 ரன்கள் குவித்து தன்னுடைய வழக்கமான பணியை நிறைவு செய்தார். ரோகித் செஞ்சுரியை நெருங்கும் போது டிவியில் அவரது மனைவி ரிதிகாவின் முகத்தைத் தான் அடிக்கடி காண்பித்துக் கொண்டிருந்தனர். செஞ்சுரி அடித்த பின் மனைவி ரிதிகாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த செஞ்சுரியின் மூலம் தன்னுடைய மனைவிக்கு ரோகித் காதலர் தின பரிசு கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

More News >>