கால்வாய்க்குள் பாய்ந்த கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

தெலங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டம் ஜோகினி பள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர் அமரேந்திர பாபு. வழக்கறிஞரான இவர் நேற்று ஹைதராபாத் நகருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை ஊர் திரும்பி கொண்டிருந்தார். மெடிப்பள்ளி என்ற இடத்தின் அருகே வந்து கொண்டிருந்த போது கார் நிலை தடுமாறி அங்குள்ள கால்வாய்க்குள் பாய்ந்தது. கால்வாயில் ஏற்கனவே தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டிருந்ததால் கார் அடித்துச் செல்லப்பட்டது.

இதில் அமரேந்திர பாபுவின் மகன் ஜெயந்த் மட்டும் தப்பி வெளியே வந்து விட்டார். அவர் அங்கிருந்த சிலரிடம் கார் மூழ்கியது பற்றி தகவல் சொல்லியிருக்கிறார்.இதைத் தொடர்ந்து அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லப்பட்டு கால்வாயில் தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டது. பின்னர் கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டது. இதில் அமரேந்திர பாபு அவரது மனைவி ஸ்ரீஷா மகள் ஸ்ரேயா ஆகிய மூவரும் காரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>