தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீதான பண மோசடி வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பண மோசடி வழக்கில் சம்பந்தமில்லாமல் தனது பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அவர் தமது மனுவில் ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் துவக்கி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக சிலர் மீது துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்த ராமநாதபுரம் போலீசார்,ரூ.300 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்தப் பண மோசடியில் எனது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.

இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என எனக்கு ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதன்படி பஜார் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி எனது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதில் மகாமுனி படத்திற்கான திரையரங்கு உரிமத்திற்காகவே ரூ 6.92 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.2 கோடி முன்பணமாக பெறப்பட்டு படத்திற்கான உரிமம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எந்த ஒரு பணம் மோசடியும் நடைபெறவில்லை. எனவே இந்த பண மோசடிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே இந்த வழக்கில் என்னை விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், இவ்வழக்கில் இருந்து தவறுதலாக சேர்க்கப்பட்ட என்னுடைய பெயரை நீக்கம் செய்ய வேண்டும் என தமது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஹேமலதா முன் விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி ஞானவேல்ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

More News >>