பிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம்? வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது

மூணாறு அருகே பிளஸ் டூ மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வரும் வாலிபர் கொலைக்கு முன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. தீவிரமாகக் காதலித்து வந்த தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு வாலிபரைக் காதலித்ததால் மாணவியைக் கொலை செய்யத் தீர்மானித்துள்ளதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள வண்டிப்பாறை என்ற இடத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவியான ரேஷ்மா (17) கடந்த சில தினங்களுக்கு முன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ஜெஸி தம்பதியின் மகளான ரேஷ்மா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரைத் தந்தை ராஜேஷின் பெரியப்பா மகனான அருண் என்ற அனு (28) என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர் ஒரு தச்சுத் தொழிலாளி ஆவார். ரேஷ்மாவை அருண் காதலிக்கும் விவரம் ரேஷ்மாவின் வீட்டினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அருணை ராஜேஷ் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 19ம் தேதி பள்ளிக்குச் சென்ற ரேஷ்மா மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து ராஜேஷ் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி ரேஷ்மாவை அருண் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றது தெரியவந்தது. இருவரும் நடந்து செல்லும் காட்சி அங்கிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் முட்புதரில் ரேஷ்மா குத்திக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.ரேஷ்மாவுடன் வாலிபர் அருணும் ஒன்றாகச் சென்றதால் அவர் தான் ரேஷ்மாவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். மேலும் ரேஷ்மாவின் உடல் அருகே அருணின் செல்போன் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அருண் தான் கொலையாளி என்பதை உறுதி செய்த போலீசார் அவரை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் அருணின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது அருண் தன்னுடைய நண்பர்களுக்கு கொலைக்கு முன் எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது.

அதில் அவர் கூறியிருப்பது: நான் ரேஷ்மாவை மிகத் தீவிரமாகக் காதலித்து வந்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டுக் கடந்த சில தினங்களாக வேறு ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருந்து வருவது தெரியவந்தது. எனக்குக் கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது. எனவே அவளைக் கொலை செய்யத் தீர்மானித்துள்ளேன். அவளைக் கொன்ற பின்னர் என்னை யாரும் பார்க்க முடியாது என்று அருண் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ரேஷ்மாவை கொலை செய்த பின்னர் அருண் தற்கொலை செய்யத் திட்டமிட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். போலீசார் அருணை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

More News >>