நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீன் ரத்தாகுமா? இன்று தீர்ப்பு

பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.மலையாள திரையுலகைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகை கடந்த 4 வருடங்களுக்கு முன் திருச்சூரில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து கொச்சிக்கு இரவில் காரில் சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் கடத்தி கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட அந்த நடிகையிடம் டிரைவராக பணிபுரிந்து வந்த சுனில் குமார் என்பவர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு மலையாள முன்னணி நடிகர் திலீப் தான் சதித்திட்டம் தீட்டினார் எனத் தெரியவந்தது. இதையடுத்து நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர். பிரபல நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது அப்போது மலையாள சினிமா உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 85 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் திலீப் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். முன் அனுமதி இல்லாமல் வெளிநாட்டுக்குச் செல்லக் கூடாது,சாட்சிகளை மிரட்டக் கூடாது என்பன உள்படப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.ஆனால் இந்த நிபந்தனைகளை மீறி நடிகர் திலீப் சாட்சிகளை மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய விபின் லால் என்பவரை மிரட்டியதாகக் கூறப்பட்ட புகார் தொடர்பாக நடிகரும், எம்எல்ஏவுமான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையிலும் நடிகர் திலீப் கேட்டுக்கொண்டதின் பேரிலேயே விபின் லாலை அவர் மிரட்டினார் எனத் தெரியவந்தது. இதையடுத்து நிபந்தனைகளை மீறிய நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது கடந்த சில வாரங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

More News >>