சேலம் கோவில் யானை ராஜேஷ்வரி கருணைக் கொலைக்கு முன்பே உயிரைவிட்ட பரிதாபம்

சேலத்தில் உள்ள சுகவனேஷ்வரர் கோவிலில் நோய்வாய்பட்டு கிடந்த யானை ராஜேஷ்வரி கருணைக் கொலை செய்வதற்கு முன்பே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ராஜேஸ்வரி என்ற கோவில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக யானை ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் எழுந்து நடக்கக்கூட முடியாமல் நோய்வாய்பட்டது. படுத்த படுக்கையாக ஆன ராஜேஸ்வரிக்கு சிகிச்சைகள் அளித்தும் குணப்படுத்த முடியவில்லை. இதனால், யானையை கருணைக் கொலை செய்வதற்காக அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, யானையை கருணைக் கொலை செய்ய முடியுமா என்பது குறித்து பதிலளிக்கும்படி இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர், இந்த வழக்கு விசாரணை கடந்த திங்கள் அன்று நீதிபதிகள் முன்னிலையில் வந்தது. அப்போது, யானை ராஜேஸ்வரியை கருணை கொலை செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். யானையை பரிசோதித்து 48 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படியும், அதன் பிறகே யானையை கருணை கொலை செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்திருந்தனர்.

இந்நிலையில், இன்று உடல்நிலை மிகவும் மோசமாக ஆன நிலையில் யானை ராஜேஸ்வரி, கருணைக்கொலை செய்வதற்கு முன்பே உயிரை விட்டது. இந்த சம்பவம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>