மனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை

தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகன்களை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடந்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள நாதாபுரம் செக்கியாடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜு (45). இவரது மனைவி ரீனா (42). இவர்களுக்கு ஸ்டாலிஷ் (17) மற்றும் ஸ்டெபின் (14) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர் இருவரும் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்தது வந்தனர். ராஜு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஓமான் நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வருடம் அங்குள்ள வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊருக்குத் திரும்பினார். ஊருக்கு வந்த பின்னர் நாதா புரம் அருகே ஒரு வீட்டைக் கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு இவர்கள் 4 பேரும் வழக்கம்போல தூங்கச் சென்றனர். இந்நிலையில் நள்ளிரவில் இவர்களது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பக்கத்து வீட்டினர் விரைந்து சென்று பார்த்தனர்.அப்போது ராஜு உள்பட 4 பேரும் தீக்காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

இது குறித்து நாதாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று நான்கு பேரையும் மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து நாதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மனைவி மற்றும் 2 மகன்களின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்று பின்னர் ராஜு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. ஒரே குடும்பத்தில் 4 பேரும் தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News >>