நரேந்திர மோடியால் 2 பேருக்கு பலன்.. ராகுல்காந்தி பேச்சு..

நாட்டில் 2 பேருக்குப் பிரதமர் மோடியால் நிறையப் பலன் கிடைக்கிறது என்று ராகுல்காந்தி பேசினார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதல் கட்டமாக, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். 2-வது கட்டமாக அவர் இன்று தூத்துக்குடியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் வழக்கறிஞர்களுடன் அவர் பேசினார். அப்போது ஒருவர் ராகுலிடம், பிரதமர் மோடியால் யாருக்கும் பயனில்லை என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய ராகுல்காந்தி, “நீங்கள் பிரதமர் மோடி பயனற்றவர் என்று சொல்கிறீர்கள். அது தவறு. யாருமே, எதுவுமே பயனற்றதாக இருக்க முடியாது. ஒவ்வொருவரும் யாருக்காவது பயனாக இருப்பார்கள். நான் விவசாயிகளுக்குப் பயனாகக் குரல் கொடுக்கிறேன். ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கிறேன். உங்களுக்குக் குரல் கொடுக்கிறேன்.

பிரதமர் மோடி 2 பேருக்கு (அதானி, அம்பானி) மிகவும் பயனுடையவராக இருக்கிறார். அந்த 2 பேரும் மோடியால் தங்கள் செல்வவளத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தூக்கி வீசும் நேரம் ஒரு நாள் வரும். நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கொள்கையுடன் மோடியும், அமித்ஷாவும் இருக்கிறார்கள்” என்று கூறினார்.மேலும் அவர் கூறுகையில், சீனாவைப் பார்த்து பிரதமர் பயப்படுகிறார். சீனாவின் ஆக்கிரமிப்புக்கு மோடியால் சரியான பதிலடி கொடுக்க முடியவில்லை என்றார். அதே போல், அரசியலமைப்பு சட்டரீதியான அனைத்து அமைப்புகளின் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

More News >>