வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தக் கோரி கையெழுத்து இயக்கம்

வாக்கு பதிவிற்கு எந்திரம் வேண்டாம்.. வாக்குச்சீட்டு மூலமே தேர்தல் நடத்த வேண்டும் என இணையத்தளம் மூலம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு அதன் மூலம் கையெழுத்து பெறும் பணிகளும் நடந்து வருகிறது அதே சமயம் இந்த இணைய தளத்தை நடத்துவது யார் என்ற விவரங்கள் எதுவும் அந்த இணையதளத்தில் இல்லை. தமிழ் ஆங்கிலம் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இது குறித்த விவரங்கள் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

வருகின்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையை ரத்து செய்துவிட்டு மீண்டும் வாக்குப்பதிவு சீட்டினை பயன்படுத்தும் முறையை கேட்டு தொடங்கப்பட்ட இந்த இணைய தளத்தில் லட்சக்கணக்கான பேர் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.வாக்கு எந்திர தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை என்பதால் தொழில்நுட்பத்தில் மிக முன்னேறிய நாடுகள் கூட வாக்குச் சீட்டிலேயே தேர்தல் நடத்துகின்றன. ஓட்டுரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். சட்டப்படியான இந்த உரிமையானது, எவ்வித சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்ட முறையில் மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

எனவே வாக்கு எந்திர தேர்தல் முறையை ரத்து செய்துவிட்டு, முன்பு இருந்தது போல வாக்குச்சீட்டு முறையிலேயே அனைத்து தேர்தல்களையும் நடத்த வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் கண்டிப்பாக வாக்குச்சீட்டின் மூலமே நடத்தப்பட வேண்டுமென கோருகிறோம். http://www.ban-evm.site/ என்ற இணையதளத்தின் மூலமாக பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை பதிவு செய்து மின்னணு கையொப்பமிட்டு கருத்தினை பதிவு வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த இணையதளத்தில் கையொப்பமிட்டுள்ளனர்

More News >>