தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பரிசுப்பொருட்கள் வழங்காமல் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை சேர்ந்த முருகேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா இடையாத்தூர் கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பொன்மாசிலிங்க அய்யனார் திருக்கோயில். இத்திருக்கோயிலில் வருடம் தோறும் மகாசிவராத்திரி விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும் மகாசிவராத்திரிக்கு மறுநாள் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் மார்ச் 12ஆம் தேதி மகாசிவராத்திரி விழா இத்திருக்கோயிலில் கொண்டாடப்பட உள்ளது.

மார்ச் 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் ஜனவரி 20ஆம் தேதி அனுமதி கேட்டு மனு அளித்தோம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தார். எனவே, வருடம் தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை ல் இந்த வருடமும் நடத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அமைதியான முறையிலும், எந்த பரிசு பொருட்களும் வழங்காமலும், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.

More News >>