இடி விழுந்து ஒருவர் மரணம்: காமிராவில் பதிந்த காட்சி

டெல்லி அருகே குருகிராமில் மின்னல் நான்கு பேரை தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். அவர்களை மின்னல் தாக்கிய காட்சி அருகிலிருந்து கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. அக்காட்சி மனதை பதற வைப்பதாக உள்ளது. மானேஸர் அருகிலுள்ள புது குருகிராம் பகுதியில் வெள்ளியன்று காலை முதல் மழை பெய்து வந்துள்ளது. மாலை 82ம் செக்டாரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் தோட்டக்காரர்கள் 4 பேர் நின்றுள்ளனர். மழையில் நனைவதை தவிர்க்க அவர்கள் மரம் ஒன்றின் கீழே நின்றுள்ளனர்.

அப்போது இடி அவர்கள்மேல் விழுந்துள்ளது. மூன்று பேர் முதலில் தடுமாறி விழுந்துள்ளனர். மரத்தில் சாய்ந்திருந்த ஒருவர் நான்காவதாக சரிந்துள்ளார். அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஒருவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாகக் கூறப்படுகிறது. மின்னல் தாக்கிய காட்சி அருகிலிருந்த கண்காணிப்பு காமிரா ஒன்றில் படமாகியுள்ளது. காண்பவரை திடுக்கிட செய்வதாக அக்காட்சி உள்ளது.

More News >>