பேராசிரியை நிர்மலா தேவியிடம் ஆசையை தூண்டிய பேராசிரியர் இருவர் கைது!

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவியை ஆசை வார்த்தைக் கூறி தன்னை தூண்டியதாக கூறப்பட்ட வழக்கில் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகள் சிலரை, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி நிர்மலா தேவி வற்புறுத்தும் ஆடியோ டேப் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆளுநர் அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுவதாகவும், அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த வழக்கின் பின்னணி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வெள்ளியன்று மதியம் 2 மணி முதல் காவலில் எடுத்துவிசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை அதிகாரியான காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, துணைக் காவல் கண்காணிப்பாளர் சாஜிதா பேகம், முத்து சங்கரலிங்கம் ஆகியோர் பேராசிரியர் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி பதில் கூறவில்லையெனவும், ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதிலளித்துள்ளார் எனவும், அவற்றை வீடியோ மூலம் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை சிபிசிஐடி காவல்துறையில் ஒரு குழுவினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று சோதனை நடத்தினர். பதிவாளர், தேர்வாணையர் அலுவலகங்களில் இருந்து சிலமுக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், நிர்மலாதேவி பல்கலைக்கழகம் வந்து சென்ற சி.சி.டி.வி. பதிவுகளை சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நிர்மலா தேவியின் உடல் நிலையை நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவக்குழுவினர் நேரில் வந்து பரிசோதித்தனர். நிர்மலா தேவியின் சகோதரர் ரவி சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்து அவரைச் சந்தித்தார். இதற்கிடையே, அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

நிர்மலா தேவியிடம், சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, யாருடைய தூண்டுதலின் பேரில் மாணவிகளிடம் பேசினீர்கள்? என்று கேட்டபோது, காமராஜர் பல்கலைகழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர்தான் ஆசை வார்த்தைக் கூறி தன்னை தூண்டியதாக கூறியிருந்தார்.

காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தேர்வாணையர் அலுவலகங்களில் சிபிசிஐடி குழுவின் ஒரு தரப்பு, சோதனை நடத்தியது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிர்மலா தேவி கூறிய பேராசிரியர் உட்பட 2 பேர் தலைமறைவாகி உள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை பேராசிரியர் முருகன், முன்னாள் மாணவர் கருப்பசாமி ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தேடப்பட்டு வந்த உதவி பேராசிரியர் முருகனை, சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகனிடம் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர். இதே புகாரில் தேடப்பட்டு வரும் முன்னாள் மாணவர் கருப்பசாமியை தேடும் பணியும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>