நேற்று சைக்கிள் இன்று விமானம் – 65வது படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா புறப்பட்டார் நடிகர் விஜய்!

நடிகர் விஜய் தனது 65-வது திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

'மாஸ்டர்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்திற்கான அறிவிப்பு இரண்டு மாதத்திற்கு முன்பு அதிகாரபூர்வமாக வெளியானது. அதேபோல் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கி புகழ்பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். விஜய் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதன்படி, கடந்த வாரம் படத்திற்கான பூஜை நடைபெற்றதுடன் இரண்டு நாள்களுக்கான படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தேர்தலுக்குப்பிறகு ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் ஏற்கனவே கூறியிருந்தனர். அதன் அடிப்படையில், நேற்று இரவு நடிகர் விஜய் ஜார்ஜியா நாட்டிற்கு புறப்பட்டார்.

படக்குழுவினர் ஏற்கெனவே சென்று அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் ஜார்ஜியா சென்றுள்ளார். இதன் காரணமாக நாளை முதல் அங்கு படப்பிடிப்பு தொடங்க உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தளபதி 65 படக்குழு ஜார்ஜியாவில் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்துவார்கள். பின்னர் ஓய்வு எடுப்பார்கள். இதையடுத்து படத்தின் அடுத்த அட்டவணை மே மாதம் சென்னையில் நடக்கும். மற்ற பணிகளின் காரணமாக 'தளபதி 65' பூஜையில் கலந்துக் கொள்ளாத பூஜா ஹெக்டே, ஜார்ஜியா அட்டவணையில் இடம்பெறுவாரா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

More News >>