கொரோனா இரண்டாம் அலையால் மீண்டும் அதிகரிக்கும் வேலை இழப்பு

கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் மீண்டும் வேலை இழப்பு அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. சிறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக இந்தியாவில் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்ததாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின. இந்திய பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் சூழ்நிலையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இதனால் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே புலம் பெயர் தொழிலாளர்கள் அச்சத்துடன் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தற்போது நடத்திய ஆய்வில் நாட்டில் வேலையின்மை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி வடி வேலையின்மை விகிதம் 8.6 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது இரண்டு வாரங்களுக்கு முன்பு 6.7 சதவிகிதமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதால் வேலையின்மை விகிதம் தற்போது 10 சதவிகித்தை எட்டும் என்றும், நகர்ப்புறங்களில் இதன் தாக்கம் மிகவும் கடுமையானதாகத் தெரிவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>