தம்பி மரணம் தீவிர மன அழுத்தம் வறுமை – ஐ.பி.எல்-போட்டியில் தெறிக்கவிடும் சக்காரியா யார்?

20லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் 1.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் சேத்தன் சக்காரியா. சர்காரியா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் உள்ளூர் போட்டிகளில் செளராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார்.

அதன்பின்னர் தொழில்முறை கிரிக்கெட்டராக மாறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் ஆடிய முதல் போட்டியே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முதல் போட்டியே பஞ்சாப் அணியுடன். பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்களாக கிறிஸ்கெய்ல், கே.எல்.ராகுல், தீபக் ஹீடா ஆகியோர் ஒருபுறம் சரவெடியாக வெடித்தனர். பவர் ப்ளே ஓவராகட்டும் கடைசி ஓவராகட்டும் கச்சிதமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தார்.

பவர் ப்ளேயில் மயங்க் அகர்வாலை காலி செய்தார். இறுதி ஓவர்களில் கே.எல்.ராகுல், ரிச்சர்ட்ஸன் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 17வது ஓவரில் 15 ரன்களை விட்டுக்கொடுத்த சர்காரியாக 20-வது ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 4 ஓவர்கள் வீசிய சர்காரிய 31 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அனைவரையும் மிரள வைத்த சர்காரியாவின் அப்பா டெம்போ டிரைவர் அவரது வருமானத்தில் தான் குடும்பம் இயங்கி வந்துள்ளது. வறுமையிலும், ஏழ்மையிலும்தான் தனது கிரிக்கெட் கனவை சர்காரியா வளர்ந்து வந்துள்ளார். விபத்தில் சிக்கிய சர்காரியாவின் தந்தை படுத்த படுக்கையாகிவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சர்காரியாவின் சகோதரர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துள்ளார்.

சேத்தன் சர்காரியா, சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆடிக்கொண்டிருந்ததால் அவரது கிரிக்கெட்டை பாதிக்கும் என எண்ணி அவரது குடும்பத்தினர் தம்பி இறந்ததைக்கூட அவரிடம் கூறவில்லை. 10 நாள்களுக்கு பிறகுதான் சர்காரியாவுக்கு தம்பி மரணம் பற்றி தெரியவந்துள்ளது.

தம்பியின் மரணம் சர்காரியாவை கடுமையாக பாதித்துள்ளது. சில நாள்கள் வீட்டிலும் யாரிடமும் அவர் பேசவில்லை. தனிமையில் இருந்துள்ளார். தீவிர மனஅழுத்தத்தில் இருந்து விடுப்பட்டு கிரிக்கெட் களத்துக்கு திரும்பியுள்ளார். தம்பி மரணமடைந்து ஒருமாதம் கழித்து நடந்த ஐபிஎல் ஏலத்தில் இவர் ராஜஸ்தான் அணிக்காக தேர்வானார்.

“என்னுடைய தம்பி ஜனவரி மாதம் தற்கொலை செய்துக்கொண்டான். நான் அப்போது வீட்டில் இல்லை. சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடிக்கொண்டிருந்தேன். நான் திரும்ப என்னுடைய வீட்டுக்கு செல்லும்வரை என்னுடைய தம்பியின் மரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய குடும்பத்தினர் தம்பி இறந்ததை என்னிடம் கூறவில்லை. நான் போன் செய்யும் போது எல்லாம் தம்பி எங்கே என்று கேட்பேன். எதாவது ஒரு காரணம் கூறுவார்கள். வெளிய போய் இருக்கான் மளிகை சாமான் வாங்க கடைக்கு போயிருக்கான் என்பார்கள்.

அவன் மட்டும் இப்போது இருந்திருந்தால் என்னை விட மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருப்பான்” என சில மாதங்களுக்கு முன்பு சேத்தன் சர்காரியா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More News >>