நிக்கி கல்ராணியிடம் 50லட்சம் மோசடி – ஓட்டல் உரிமையாளருக்கு வலை வீச்சு!

நடிகை நிக்கி கல்ராணியிடம் ரூ.50லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

டார்லிங், யாகாவராயினும் நா காக்க, மரகத நாணயம், உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர் நிக்கி கல்ராணி. தற்போது கோ2 படத்தில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நிக்கி கல்ராணி. இவரது சகோதரி சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகை நிக்கி கல்ராணியின் குடும்பத்தினர் பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் நடிகை நிக்கி கல்ராணி ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீது ஒரு புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், கோரமங்களா பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் நிகில். இவருடைய ஓட்டலில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.50 லட்சம் முதலீடு செய்திருந்தேன்.

இதற்காக மாதம் ரூ.1 லட்சம் கொடுப்பதாக நிகில் கூறியிருந்தார். ஆனால் இதுவரை நிகில் எனக்கு மாதம் ரூ.1 லட்சம் கொடுக்கவில்லை. மாறாக என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தையும் திரும்ப கொடுக்கவில்லை.

இதுபற்றி பலமுறை நிகிலிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் நிகில் மோசடி செய்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை நிக்கி கல்ராணி கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>