கல்வீச்சு.. கடுப்பான சந்திரபாபு நாயுடு – ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீது சாடல்!

தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற 17ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தெலுங்கு தேச கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக திருப்பதி வந்திருந்தார் சந்திரபாபு நாயுடு.

இன்று அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, திருப்பதியில் கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் பரப்புரையில் ஈடுப்பட்டார். அப்போது நபர் ஒருவர் கூட்டத்தில் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கல் வீசியவர்கள் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ரவுடிசம் அதிகரித்து இருப்பதற்கு இதுவே நேரடியான சாட்சி என்று கூறியவர், தைரியமிருந்தால் நேருக்கு நேர் வந்து மோதுங்கள் பார்ப்போம். மக்கள் மீது ஏன் கற்களை வீசுகிறீர்கள் என்று கடுமையாக சாடினார். .

இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும் கற்களை வீசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டார்.

நான் ஜெட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. அப்படியானால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவில் இருக்கிறது என்பதை மக்களாகிய நீங்களே பார்த்து முடிவெடுங்கள் என்று மக்களை நோக்கி கூறினார்.

More News >>