`பாஜக ஒரு வலிமையான அரசியல் சக்தி.. மீண்டும் பிரசாந்த் கிஷோர்!

மம்தா பானர்ஜி தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்காக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார். பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி, அடுத்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் ஆகியோருக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வெற்றி பெற வைத்தவர். ஆனால் சமீபகாலமாக பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தற்போது பிரசாந்த் கிஷோர், கொல்கத்தாவுக்கு அடிக்கடி வந்து திரிணாமுல் மூத்த தலைவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

அவரின் ஆலோசனைப்படியே, மம்தா தேர்தல் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இந்தநிலையில், மம்தாவுடன் கைகோர்த்துள்ள நிலையில், சமீபத்தில் மேற்குவங்கத்தில், பாஜகதான் வெற்றி பெறும் பிரசாந்த் பேசியுள்ள ஆடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ``இந்த முறை திரிணாமுல் நடத்திய சர்வேயில் பாஜகவுக்கு தான் ஆதரவு அலை இருப்பது தெரியவந்துள்ளது. மேற்குவங்கத்தை பொறுத்தவரை மோடி மற்றும் மம்தா இருவரும் சம அளவில் பிரபலமாக உள்ளனர். இங்கு மோடி பிரபலமாக இருக்க காரணம், இந்தியா முழுவதும் மோடியை கடவுளாகப் பார்க்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் உள்ளது தான்.

மேலும், கடந்த 30 ஆண்டுகளில் செய்யாத சிலவற்றை பாஜக செய்யும் என்று மேற்குவங்க மக்கள் நினைக்கிறார்கள்" என்று பேசியிருந்தார். இது கடும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் மீண்டும் இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் பேசியிருக்கிறார். ``மேற்குவங்காளத்தை பொறுத்தவரை பாஜக ஒரு வலிமையான அரசியல் சக்தி. அதனை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இந்த தேர்தலில் மம்தா தான் ஆட்சியை பிடிப்பார். பாஜக 100 இடங்களை தாண்டாது. வங்கத்தில் மம்தா இன்னும் மக்களின் அன்பை, மதிப்பை, நம்பிக்கையைப் பெற்ற தலைவராக இருக்கிறார். பெண்களின் அபிமானம் அவருக்கு அதிகமாகவே இருக்கிறது" என்று பேசியுள்ளார்.

More News >>