டெல்லியில் சனி , ஞாயிறு முழு ஊரடங்கு?

டெல்லியில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 17,282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் பதிவாகியுள்ளது. மேலும், 104 பேர் கொரோனாவால் இறந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,540 ஆக உயர்ந்துள்ளது. இதனால் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோன பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தலைநகரில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஏழு மணி நேர இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அண்மையில் பேசிய, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முழு நேர ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை எனவும் தடுப்பூசியை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

டெல்லியில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று துணைநிலை ஆளுநர் அனில் பைஜலுடனான சந்திப்பின்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்க முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.

More News >>