கருப்பின இளைஞர் கொலைக்கு பெண் அதிகாரி பிராய்ச்சிதம்

கருப்பின இளைஞர் கொலைக்கு பெண் அதிகாரி பிராய்ச்சிதம் அமெரிக்காவில் கருப்பின இளைஞரை சுட்டுக்கொன்ற பெண் காவல் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் என்ற கருப்பின இளைஞரை காவலர்கள் கைது செய்ய முற்பட்டனர். அப்போது என்மீது தவறு இல்லை எனக்கூறி அந்த இளைஞர் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது பெண் காவல் அதிகாரியான கிம் பாட்டர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைக் கண்டித்து, புரூக்ளின் சென்டர் நகரில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் வன்முறைகள் அரங்கேறின. இதனிடையே டான்ட் ரைட் கொல்லப்பட்டது ஒரு விபத்து என்றும், காவல் அதிகாரி கிம் பாட்டர் எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் டாசர் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு பதில் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதாகவும் புரூக்ளின் சென்டர் நகர காவலர்கள் தெரிவித்தனர்.

இதனை ஏற்க மறுத்து போராட்டக்காரர்கள், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டான்ட் ரைட்டை சுட்டுக்கொன்ற பெண் காவல் அதிகாரி கிம் பாட்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதனைத் தொடர்ந்து புரூக்ளின் சென்டர் நகரின் தலைமை போலீஸ் அதிகாரியான டிம் கேனனும் தனது பதவியை ராஜினாமா செய்தார். காவல் அதிகாரிகளின் இந்த முடிவு போராட்டத்தை தணித்து சமூகத்தில் அமைதியை கொண்டுவர உதவும் என புரூக்ளின் சென்டர் நகர மேயர் எலியட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More News >>