அரசு பணியாளர் முதல் சினிமா வரை – நடிகர் விவேக்கின் வாழ்க்கை பயணம்!

நகைச்சுவை நடிகர் விவேக் இன்று நம்மிடம் இல்லை. அவரது வாழ்க்கை பயணத்தை இத்தருணத்தில் திரும்பி பார்ப்போம்.

“சின்னக் கலைவாணர்” என அழைக்கப்படும் விவேக் அவர்கள், 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் மதுரையில் பிறந்தார். இவரது முழு பெயர் விவேகானந்தன். அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றார். அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெற்றிப்பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

1987 ஆம் ஆண்டு, மனதில் உறுதிவேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமா துறையில் கால்பதித்தார் விவேக். , அத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த புது புது அர்த்தங்கள் திரைப்படத்தில், இவர் பேசிய இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ஒரு வீடு இரு வாசல், புது மாப்பிள்ளை, கேளடி கண்மணி, இதய வாசல், புத்தம் புது பயணம் எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிபடுத்தும் காட்சிகளில் நடிக்காமல், நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தார்.

உனக்காக எல்லாம் உனக்காக, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, உன்னருகே நானிருந்தால், ஆசையில் ஓர் கடிதம், சந்தித்த வேளை, கந்தா கடம்பா கதிர்வேலா, பெண்ணின் மனதைத்தொட்டு, பாளையத்து அம்மன், சீனு, லூட்டி, டும் டும் டும், விஸ்வநாதன் ராமமூர்த்தி, பூவெல்லாம் உன் வாசம், அள்ளித்தந்த வானம், ஷாஜகான், மனதைத் திருடிவிட்டாய், தென்காசிப் பட்டணம், யூத், ரன், காதல் சடுகுடு, சாமி, விசில், தென்னவன், தூள், பாய்ஸ், திருமலை, பேரழகன், அந்நியன், சிவாஜி, பசுபதி மே/பா ராசக்காபாளையம், சண்டை, படிக்காதவன், பெருமாள், குரு என் ஆளு, ஐந்தாம் படை, தம்பிக்கு இந்த ஊரு, சிங்கம், பலே பாண்டியா, உத்தம புத்திரன், சீடன், மாப்பிள்ளை, வெடி போன்ற திரைப்படங்கள் இவருடைய நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்.

தமிழ் திரைப்படத்துறையில் சின்னக்கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். பாளையத்து அம்மன், லவ்லி, அள்ளித்தந்த வானம், யூத், காதல் சடுகுடு, விசில், காதல் கிசு கிசு, பேரழகன், சாமி, திருமலை போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர்,

திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வந்தார். இன்று அவர்நம்மோடு இல்லை என்பது அவரது ரசிகர்கள்மட்டுமல்லாமல் பலருக்கும் வருத்ததை கொடுத்துள்ளது.

More News >>