இந்தியாவில் கொரோனா தீவிரம் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ஆலோசனை நடத்துகிறார்

இந்தியாவில் கொரோனா வைரஸ்தொற்று முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. நாள்தோறும் பாதிப்பு ஏறுமுகத்தை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்ட ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறினார்.

அதன்பிறகு வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் மூத்த மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு இந்தியாவில் போதுமான பாதுகாப்பு கவச உடைகள், வென்டிலேட்டர்கள், என்95 முகக்கவசங்கள் இல்லை என்றும், ஆனால் மிக குறுகிய காலத்திலேயே தன்னிறைவை எட்டியுள்ளதாக கூறினார். முதல் கொரோனா வைரஸ் அலையை தடுத்தது போன்று இரண்டாவது அலையையும் வெற்றிகரமாக தடுப்போம் என்று ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

More News >>